இந்திய சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராகவும் தென்னிந்திய திரையுலகின் உச்ச நட்சத்திர நாயகராகவும் ஜொலிக்கும் தளபதி விஜய் முதல் முறை தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் நடித்துள்ள வாரிசு திரைப்படம் பொங்கல் வெளியீடாக வருகிற ஜனவரி 12ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகிறது. அதே நாளில் அஜித்குமாரின் துணிவு திரைப்படமும் ரிலீஸாக இருப்பதால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கின்றனர்.

வாரிசு திரைப்படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் இன்னும் ஆவலோடு காத்திருப்பதற்கு காரணம் தளபதி 67.  சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பேசிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தளபதி 67 திரைப்படத்தின் அறிவிப்புகள் வாரிசு படத்தின் ரிலீஸுக்கு பிறகு வெளியாகும் என அறிவித்திருந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு தளபதி 67 திரைப்படத்தின் படப்பூஜை சென்னையில் உள்ள ஏவிஎம் ஸ்டுடியோவில் நடைபெற்றது.

தளபதி விஜயுடன் இணைந்து நடிகை திரிஷா கதாநாயகியாக நடிக்க இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ஆக்சன் கிங் அர்ஜுன், பிரியா ஆனந்த், மன்சூர் அலி கான்  ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளிவரும் நிலையில் இது குறித்து அதிகாரப்பூர் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் தளபதி விஜய் உடன் தளபதி 67 படத்தில் தயாரிப்பாளர் லலித் குமார் இணையவுள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் இதனை உறுதிப்படுத்தும் விதமாக தயாரிப்பாளர் லலித் குமார் அவர்களின் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிப்பு நிறுவனத்தின் ட்விட்டர் பக்கத்தில் வெளியான பதிவில் 2022 GOALS என 1.மகான், 2.காத்து வாக்குல ரெண்டு காதல், 3.கோப்ரா எனக் குறிப்பிட்டு, 2023 GOALS என 4.வாரிசு, 5.வாத்தி 6..7..என பதிவிடப்பட்டுள்ளது. 

எனவே தளபதி67 படத்தை தயாரிப்பதை சிம்போலிக்காக தெரிவித்துள்ளதாக அவரது ட்விட்டர் பதிவு தற்போது வைரலாகி வருகின்றது. இது குறித்த முழுமையான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெகு விரைவில் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ வெளியிடும் என ரசிகர்கள் ஆவலோடு இருக்கின்றனர். அட்டகாசமான அந்த பதிவு இதோ…