5 வயது பெண் குழந்தையை போலீசார் ஒருவர் வீடு புகுந்து லத்தியால் அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அடுத்த சவட்டையன் வலசை பகுதியில், பேரிடர் காலத்தில் பயன்படுத்துவதற்கான பொருட்களை, பேரிடர் மீட்புக் குழு அதிகாரிகள் அந்த ஊரில் இறக்கி வைத்துள்ளனர்.

girl injured in police lathi

அப்போது, அந்த ஊரைச் சேர்ந்த சண்முகநாதனுக்கும், வேறு சிலருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதனையடுத்து, ஊர் மக்கள் சமாதானப்படுத்தி, சண்முகநாதனை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். 

இந்நிலையில், அவர் வீடு திரும்பிய அடுத்த சில நிமிடத்தில், அவரது வீட்டிற்கு வந்த போலீசார் ஒருவர், 
பேரிடர் மீட்புக் குழுவினர் சார்பில் புகார் அளிக்கப்பட்டதாகக் கூறி, இரவு நேரத்தில் காவல் நிலையத்திற்கு அவரை விசாரணைக்கு வருமாறு அழைத்துள்ளார். இது தொடர்பாக அந்த போலீசாருக்கும், சண்முகநாதனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால், ஆத்திரமடைந்த அந்த போலீஸ்காரர், சண்முகநாதனை வீடு புகுந்து லத்தியால் கடுமையாகத் தாக்கி உள்ளார்.

girl injured in police lathi

அப்போது, சண்முகநாதனின் 5 வயது பெண் குழந்தை ஓடி வந்து “அப்பாவை அடிக்க வேண்டாம்” என்று கத்திக்கொண்டே போலீஸ்காரரை தடுத்துள்ளது. ஆனாலும், அந்த போலீஸ்காரர் தொடர்ந்து சண்முகநாதனை அடித்துக்கொண்டே இருந்ததால், அந்த அடி  5 வயது பெண் குழந்தையின் முதுகில் பலமாகப் பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதில், வலி தாங்க முடியாமல், துடிதுடித்த அந்த குழந்தை, அங்கே சுருண்டு விழுந்தது. 

இதனால் பதறிப்போன குழந்தையின் தாயார், அலறி அடித்துக்கொண்டு குழந்தையை மீட்டு, ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்தார். அங்குக் குழந்தைக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

குழந்தை தாக்கப்பட்டது தொடர்பாக விளக்கம் அளித்த திருப்புல்லாணி போலீசார், பேரிடர் மீட்புக் குழுவினரைப்  பணி செய்ய விடாமல் தடுத்து மிரட்டியதாக அளித்த புகாரின் பேரிலேயே விசாரிக்கச் சென்றதாகத் தெரிவித்துள்ளனர். 

மேலும், போலீஸ்காரர் விசாரணைக்குச் சென்றபோது, இருவருக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டுள்ளது என்றும், ஆனால் 5 வயதுக் குழந்தை தாக்கப்படவில்லை என்றும் கூறியுள்ளனர். குறிப்பாக, சண்முகநாதன் குழந்தை தாக்கப்பட்டதாக இதுவரை யாரும் புகார் தெரிவிக்கவில்லை என்றும் போலீசார் அலட்சியத்துடன் பதில் அளித்துள்ளனர். 

police lathi

இதனிடையே, 5 வயது பெண் குழந்தையை போலீசார் ஒருவர், லத்தியால் அடித்த சம்பவம் தமிழகம் முழுவதும் வைரலாகி வருகிறது. மேலும், 5 வயது பெண் குழந்தையை போலீசார், கோபத்தில் வேண்டும் என்றே அடித்தாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.