தனது குரலால் உலகையே வசப்படுத்தியவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். இசை பிரியர்களின் உலகமான எஸ்.பி.பி, சில நாட்கள் முன்பு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து கடந்த 5ம் தேதி சென்னையில் இருக்கும் எம்.ஜி.எம். மருத்துவமனையில் அவரை அனுமதித்தனர். தனக்கு கொரோனாவின் அறிகுறிகள் தீவிரமாக இல்லை என்றாலும் தான் குடும்பத்தாரின் நலன் கருதி மருத்துவமனைக்கு வந்ததாகவும் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் தெரிவித்தார்.

இதனிடையே ஆகஸ்ட் 14-ம் தேதி மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், எஸ்.பி.பி உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவித்தது. அதில், உயிர்காக்கும் கருவிகளுடன் இருந்து வரும் அவரது உடல் நிலை ஆபத்தான கட்டத்தில் உள்ளது எனவும், மருத்துவ நிபுணர்களின் தீவிர சிகிச்சைக் கண்காணிப்பில் இருந்து வருகிறார் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. எஸ்.பி.பி உடல்நிலை குறித்த தகவல் வெளியானவுடன் பல்வேறு பிரபலங்கள் அவர் பூரண நலம்பெற பிரார்த்தனை செய்வதாக கருத்து பதிவிட்டு வந்தார்கள். 

எஸ்.பி.பி உடல்நிலை குறித்து அவருடைய மகன் எஸ்.பி.சரண் நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். என் தந்தையின் உடல்நலம் குறித்து அக்கறை கொண்டு விசாரித்ததற்கு மிக்க நன்றி. அவர் ஐசியூவில் வென்டிலேஷனில் உள்ளார். அவர் உடல்நிலை சீராக உள்ளது. வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார். 

இந்நிலையில் எஸ்.பி.பி.க்காக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். அதில் அவர் கூறியிருப்பதாவது, 50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவின் பல மொழிகளில் தன்னுடைய இனிமையான குரலால் பாடி கோடிக்கணக்கான மக்களை மகிழ்வித்த எஸ்.பி.பி.யின் உடல்நலன் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று அபாயகட்டத்தை தாண்டிவிட்டார் என்பதைக் கேள்விப்பட்டதிலிருந்து எனக்கு மகிழ்ச்சி. இன்னும் தீவிர சிகிச்சையில் உள்ள எஸ்.பி.பி. சீக்கிரம் குணமடைய வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பல படங்களில் எஸ்.பி.பி தான் ஓப்பனிங் சாங் பாடியிருப்பார். கடைசியாக வெளியான தர்பார் படத்திலும் எஸ்.பி.பி பாடியிருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.