நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகிறது. முயற்சிகள் ஒருபுறம் இருக்க, வைரஸின் தாக்கம் வேகமாக இருக்கிறது. இந்த தொற்று காரணமாக உயிரிழப்போர் எண்ணிக்கையும் உயர்ந்துகொண்டே வருகிறது. குறிப்பாக இந்த லாக்டவுனில் திரைப்பிரபலங்கள் சிலரை இழந்து தவித்து வருகின்றனர் திரை ரசிகர்கள். 

இந்நிலையில் தமிழ் சினிமாவின் சிறந்த படங்களை தயாரித்த முன்னணி தயாரிப்பாளர் வி சுவாமிநாதன் கொரோனா தொற்று காரணமாக இன்று உயிரிழந்திருக்கிறார். சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவர் லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ் என்ற நிறுவனம் மூலமாக பல்வேறு வெற்றி படங்களை தயாரித்தவர் ஆவார். 

வி சுவாமிநாதனுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இளைய மகன் அஸ்வின் ராஜா கும்கி படத்தில் காமெடியனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் முன்பே அவர் பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் ராஜேந்திரனின் மகனாக நடித்து இருந்தார். கும்கி அஸ்வினுக்கு சமீபத்தில் தான் திருமணம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

சுவாமிநாதன் 90களில் இருந்து பல முன்னணி ஹீரோக்களுடன் படங்கள் தயாரித்து வந்திருக்கிறார். சரத்குமார் நடித்த அரண்மனை காவலன் என்ற படம் தான் இவரது முதல் படம். அதற்கு பிறகு கமல்ஹாசன் நடித்த அன்பே சிவம் படத்தையும் அவர் தயாரித்திருந்தார். சுந்தர் சி தான் அந்த படத்தை இயக்கியிருந்தார். சுந்தர் சி உடன் அவர் தொடர்ந்து 5 படங்களில் பணியாற்றி இருக்கிறார். 

மேலும் தளபதி விஜய் நடித்த பிரியமுடன் மற்றும் பகவதி ஆகிய படங்களையும் தயாரித்தது சுவாமிநாதன் தான். பகவதி படத்தில் இடம்பெற்ற நகைச்சுவை காட்சியிலும் சுவாமிநாதன் நடித்து இருந்தார். இது உங்கள் சொத்து என வடிவேலுவுடன் இவர் செய்யும் நகைச்சுவை ரசிகர்களின் ஃபேவரைட். 

தல அஜித்துடன் நடித்த உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் மற்றும் உன்னை தேடி ஆகிய படங்களை அவர் தயாரித்து இருக்கிறார். மேலும் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டிய படம் தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கிய புதுப்பேட்டை படம், அதையும் லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. கடைசியாக சுவாமிநாதன் தயாரித்திருந்த படம் ஜெயம் ரவி மற்றும் த்ரிஷா நடித்த சகலகலா வல்லவன் படம். சுவாமிநாதன் மறைவுக்கு முன்னணி சினிமா நட்சத்திரங்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.