நானே வருவேன் அதிகாலை 4மணி காட்சி இல்லாதது எதனால்..? தயாரிப்பாளர் தாணு விளக்கம்!
By Anand S | Galatta | September 27, 2022 21:13 PM IST
மிகச் சிறந்த நடிகராக வலம் வரும் நடிகர் தனுஷ் அடுத்ததாக ராக்கி மற்றும் சாணிக் காயிதம் படங்களின் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்பு பூஜையுடன் தொடங்கப்பட்டது.
முன்னதாக முதல்முறை தெலுங்கு மற்றும் தமிழ் என இரு மொழிகளில் இயக்குனர் வெங்கி அட்லுரி இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள வாத்தி திரைப்படம் வரும் டிசம்பர் 2ம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனது சகோதரரும் இயக்குனருமான செல்வராகவன் இயக்கத்தில் இரட்டைவேடங்களில் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் நானே வருவேன்.
தயாரிப்பாளர் கலைப்புலி.எஸ்.தாணு அவர்கள் தயாரிப்பில் உருவாகியுள்ள நானே வருவேன் திரைப்படத்திற்கு கதை திரைக்கதை வசனம் எழுதியுள்ளார். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்ய,பிரசன்னா.GK படத்தொகுப்பு செய்துள்ள நானே வருவேன் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். வரும் செப்டம்பர் 29-ஆம் தேதி நானே வருவேன் திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸாகிறது.
இந்நிலையில் நானே வருவேன் படத்திற்கு அதிகாலை 4மணி காட்சிகள் ஏன் இல்லை என்பது குறித்து தயாரிப்பாளர்.எஸ்.தாணு அவர்கள் விளக்கம் அளித்துள்ளார். “என்னுடைய திரைப்படங்கள் அசுரனாக இருக்கட்டும் கர்ணனாக இருக்கட்டும் நான் எடுத்த முடிவு 8 மணி… 8 மணிக்கு திரையிட்டால் உலகம் முழுவதும் பார்க்கலாம். 4 மணிக்கு வெளியிட்டால் உலகம் முழுக்க பார்ப்பது கடினமாக இருக்கும் உலகம் முழுவதும் நேரம் மாறுபடுகிறது. அது மட்டுமல்லாமல் 4 மணிக்கு காட்சி வைத்தால் நிறைய இளைஞர்கள் இரு சக்கர வாகனங்களில் மிக வேகமாக செல்ல வேண்டியிருக்கும் அப்படி செல்லும்போது ஏதாவது தவறு நேர்ந்து விட்டால் என்ன செய்வது எனவே நமக்கும் லாபம் இருக்க வேண்டும் மற்றவர்களுக்கும் பாதுகாப்பு இருக்க வேண்டும்” என்று ரசிகர்களின் நலன் கருதி செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். கலைப்புலி.எஸ்.தாணு அவர்கள் நமது கலாட்டா சேனலுக்கு அளித்த பிரத்யேக பேட்டி இதோ…