தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான அஜித்குமார் மற்றும் தளபதி விஜயின், துணிவு மற்றும் வாரிசு ஆகிய திரைப்படங்கள் வருகிற ஜனவரி 11ஆம் தேதி பொங்கல் வெளியீடாக உலகெங்கும் ரிலீஸாகின்றன. தமிழ் சினிமாவின் இருப்பெரும் துருவங்களான அஜித்குமார் மற்றும் தளபதி விஜயின் திரைப்படங்கள் நீண்ட இடைவெளிக்கு பிறகு பண்டிகை சமயத்தில் ஒரே நாளில் வெளியாவதால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தோடு இரண்டு படங்களையும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

இரண்டு திரைப்படங்களின் ட்ரெய்லர்களும் வெளிவந்து ரசிகர்களுடைய மிகப்பெரிய வரவேற்பையும் விமர்சனங்களையும் பெற்று வரும் நிலையில், நமது கலாட்டா சேனலுக்கு பேட்டி அளித்த தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் அவர்களிடம் இந்த 11ம் தேதியன்று முதல் நாள் முதல் காட்சி எப்படி இருக்கப் போகிறது தமிழ்நாடு எப்படி இருக்க போகிறது? என்று கேட்டபோது,

“தமிழ்நாடே பற்றிக்கொள்ளப் போகிறது என்று தான் சொல்வேன். மிகுந்த பரபரப்பில் இருக்கிறது. தீயாக எல்லோரும் படம் பார்க்கப் போகிறார்கள். நாங்கள் தீயா வேலை செய்யணும் குமாரு என ஒரு படம் எடுத்து வந்தோம். தீயா எல்லா ரசிகர்களும் படம் பார்க்க வேண்டும். 11ம் தேதி ஜே ஜே ஜே என தமிழகமெங்கும் கூட்டம் வந்து மிகப்பெரிய வசூலை கொடுக்க வேண்டும். 11ம் தேதி மட்டும் போதாது 25ம் தேதி வரை கொடுங்கள். பெரிய அளவில் தமிழகத்தில் முதல் மாதமே ஒரு 300 - 400 கோடி ரூபாய் பாக்ஸ் ஆபிஸில் வரவேண்டும் என எதிர்பார்க்கிறேன். அப்போதுதான் தமிழ் சினிமா அடுத்த கட்டத்திற்கு செல்ல முடியும். இதுவரை பொங்கலுக்கு வெளியான படங்கள்.. இரண்டு படங்கள் போட்டியிட்ட போது அதிகபட்சமாக தமிழகத்தில் வசூலானது பாக்ஸ் ஆபீஸில் 250 கோடி. இப்போது நான் எதிர்பார்ப்பது குறைந்தபட்சம் 300-லிருந்து 350 கோடி. இந்த இரண்டு படங்களும் இன்டஸ்ட்ரி ஹிட் ஆகும் பட்சத்தில் 400 கோடி ரூபாய் ஆகும். தமிழ் சினிமாவைப் பற்றி இந்த உலகமே பார்த்து வியக்கும். ஹிந்தியில் இதுவரை இந்த மாதிரியான கலெக்ஷன் வரவில்லை. தெலுங்கிலும் RRR படத்திற்குப் பிறகு எதுவும் வரவில்லை. எனவே எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் இந்த பொங்கல் எப்படி இருக்க போகிறது என்று. தமிழ் சினிமா ஜெயிக்கப் போகிறதா? தெலுங்கு சினிமா ஜெயிக்கப் போகிறதா? என்று. ஏனென்றால் தெலுங்கு சினிமாவில் இரண்டு பெரிய படங்கள் போட்டிக்கு வருகின்றன. வாரிசு படம் இருந்தாலும் ஒன்று சிரஞ்சீவி சாரின் வால்டர் வீரய்யா… மற்றொன்று நந்தமுரி பாலகிருஷ்ணாவின் வீரசிம்ம ரெட்டி… அந்த இரண்டு நடிகர்களின் படங்களின் பாக்ஸ் ஆபிஸ் வசூலை இந்த இரண்டு நடிகர்களின் படங்களின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் வெல்ல போகிறதா? எந்த இண்டஸ்ட்ரி பெரியது… இப்படி பார்க்கும்போது தமிழ் சினிமா இந்திய சினிமாவிற்கே ஒரு உதாரணமாக இந்த பொங்கலில் மாற வேண்டும். இந்திய அளவில் அனைவரும் பேச வேண்டும் என எதிர்பார்க்கிறேன்.” என பதிலளித்துள்ளார். தயாரிப்பாளர் தனஞ்ஜெயனின் அட்டகாசமான அந்த முழு பேட்டி இதோ…