தென்னிந்தியாவில் மிகப்பெரிய கவனம் பெற்ற திரைப்படம் 'பிரேமம்'. பெரும்பாலானோர் மலையாள திரைப்படங்கள் பார்த்ததற்கு இந்த படம் தான் காரணம். நிவின் பாலி, சாய்பல்லவி, மடோனா செபஸ்டின், அனுபமா பரமேஸ்வர் உள்ளிட்ட நட்சத்திரங்களுடன் இளமை ததும்பும் கல்லூரி கதையுடன் கதாநாயகனின் காதல் வாழ்கையையும் அடிப்படையாக கொண்டு இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இந்த படத்தை கொடுத்திருப்பார். வித்யாசமான காட்சிகள், எதார்த்தமான கதாபாத்திரங்களை திரைக்கதையில் கொடுத்து மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியது பிரேமம் தான்
என்னத்தான் மலையாளத்தில் ஹிட் கொடுத்தாலும் அல்போன்ஸ் புத்திரன் அவர்களின் முதல் படம் தமிழில் தான். நிவின் பாலி, நஸ்ரியா நடிப்பில் வெளியான ‘நேரம்’ திரைப்படம். இது கலவையான விமர்சனத்தை கொடுத்தாலும் கவனம் பெற்றது. அதன் பின் பிரேமம் திரைப்படத்தை தொடர்ந்து ‘அவியல்’ என்ற தமிழ் ஆந்தாலஜியில் இறங்கினார் எதிர்பார்த்த வரவேற்பு படத்திற்கு கிடைக்கவில்லை. அதன் பின் ஆறு வருடம் கழித்து பிரித்வி ராஜ், நயன்தாரா நடிப்பில் ‘கோல்ட்’ திரைப்படத்தை இயக்கினார். படம் மக்களிடம் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.
முதலில் தமிழ் பின்பு மலையாளம் என்ற ஒரு வரிசை கோட்பாட்டை வைத்து படம் கொடுத்து வரும் அல்போன்ஸ் புத்திரனின் அடுத்த படம் தமிழில் இருக்க கூடும் என்பது ரசிகர்களின் கருத்து. சமீபத்தில் அல்போன்ஸ் புத்திரன் உலகநாயகனை சந்தித்தது திரையுலகில் பேசுபொருளாக மாறியது. மேலும் இளம் இயக்குனருடன் தொடர்ந்து கதை கேட்டு வரும் கமல் ஹாசன் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நடித்தாலும் ஆச்சர்யம் இல்லை என்று சினிமா வட்டாரங்கள் பேசும் நிலையில் ரசிகர் ஒருவர் இணையத்தில் அல்போன்ஸ் புத்திரனிடம் நடிகர் அஜீத் உடன் எப்போது பணியாற்றுவீர் என்று கேள்வியை எழுப்பினார் அதற்கு அல்போன்ஸ் புத்திரன்
“நான் இதுவரைக்கும் அவர சந்தித்தது இல்லை. பிரேமம் படம் வெளியான போது நிவின் பாலியை அஜித் சார் தொடர்பு கொண்டு படத்தை பற்றி பாராட்டினார். அதுக்கு அப்பறம் கிட்டத்தட்ட 8 ஆண்டுகளில் 10 முறை நான் அவரை சந்தித்து பேச முயற்சி செய்து வருகிறேன். அஜித் சாரோட வலது கையும் மேனேஜருமான சுரேஷ் சந்திரா அவர்களிடம் சந்திப்பு குறித்து நிறைய முறை கேட்டதுண்டு.. வயசு ஆகுறதுக்குள்ள அவர பார்க்க முடிஞ்சா நல்ல படம் பண்ணுவேன்.
தம்பி நீங்கள் இதுபோல ஒவ்வொரு முறை அஜித் சார் கூட படம் பண்ணுவது பற்றி கேட்கும்போது எனக்கு எவ்ளோ வலிக்கும். நான் முயற்சி செஞ்சு ஓய்ந்து போயிட்டேன்.நீங்கள் கேட்கும்போது முதலில் கோவம் வரும் நீங்களும் என்ன மாதிரி அஜித் சார் ரசிகரா கேட்குறிங்க னு நினச்சிட்டு அந்த கேள்வியை பார்க்காத மாதிரி போயிடுவேன். ஒருவேளை அஜித் சார் கூட படம் பண்ற நிலை வந்தால் நிச்சயம் படம் 100 நாள் எல்லா திரையரங்குகளில் ஓடும், இது அஜித் சார் மட்டுமல்ல, உலகநாயகன் கமல் ஹாசன், சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த், தளபதி விஜய் க்கும் பொருந்து. இந்த படங்களை முடிக்க தேவைப்படும் பணத்தையும் அன்பையும் வைத்து என் படத்தை நான் விரும்பும் அளவு செய்ய எனக்கு 100சதவீதம் சுதந்திரம் கொடுக்கப்பட வேண்டும். அப்போது நான் சொல்வது சரியா? இல்லையா? என்பதை நீங்கள் பார்ப்பீர்கள்..” என்று குறிப்பிட்டிருந்தார்.
அஜித் இளம் இயக்குனர்களுக்கும் திரையுலகில் இடைவெளிவிட்ட இயக்குனர்களுக்கும் ஆரம்பத்திலிருந்தே வாய்ப்பு கொடுப்பவர், மேலும தற்போது அஜித் தொடர்ந்து இளம் இயக்குனர்களையே தேர்வு செய்து வருகின்றார். விக்னேஷ் சிவன் கூட்டணியில் உருவாகவுள்ள ‘Ak62’ திரைப்படம் பின் அஜித் யாரை இயக்குனராக தேர்ந்தெடுப்பார் என்ற கேள்வி ரசிகர்ளிடம் எழுந்துள்ள நிலையில் அல்போன்ஸ் புத்திரனின் ஆதங்க பதிவு அஜித் ரசிகர்களை நெகிழ செய்து அவர்கள் அதனை அதிகளவு பகிர்ந்து வருகின்றனர். கூடிய விரைவில் இந்த செய்தி அஜித் காதுகளுக்கு சென்று அல்போன்ஸ் புத்திரன் அஜித் சந்திப்பு நிகழும் என்பதே இன்று பலருடைய எதிர்பார்ப்பாகவுள்ளது.