தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக சிறந்த தயாரிப்பாளராகவும் விளங்கும் நடிகர் சூர்யாவின் நடிப்பில் நாளை (மார்ச் 10ஆம் தேதி) உலகெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது எதற்கும் துணிந்தவன் திரைப்படம். சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதிமாறன் தயாரித்துள்ள எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்கியுள்ளார்.

ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிடும் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடிகை பிரியங்கா அருள்மோகன் கதாநாயகியாக நடிக்க, சத்யராஜ், ராஜ்கிரண், வினய், சரண்யா பொன்வண்ணன், சூரி, M.S.பாஸ்கர், ஜெயப்பிரகாஷ், இளவரசு, தேவதர்ஷினி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ரத்னவேலு ஒளிப்பதிவு செய்துள்ள எதற்கும் துணிந்தவன் படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.

முன்னதாக நடிகர் சூர்யா தயாரித்து நடித்து கடந்த ஆண்டு வெளிவந்த ஜெய்பீம் திரைப்படம் பலரது பாராட்டுக்களைப் பெற்ற போதும் குறிப்பிட்ட ஒரு சமூகத்தினரை தாக்கும் விதமாக இருப்பதாக பாட்டாளி மக்கள் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து நடிகர் சூர்யாவின் மீது தாக்குதல் நடத்தும் விதமாக மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் நடிகர் சூர்யா வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது.

இந்நிலையில் ஜெய்பீம் சர்ச்சையின் எதிரொலியாக தற்போது ரிலீசாக உள்ள எதற்கும் துணிந்தவன் திரைப்படத்திற்கும் பாமகவினர் படத்தை திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய மறுத்து தெரிவிக்குமாறு தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் நாளை திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளதால் நடிகர் சூர்யாவின் வீட்டிற்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.