தமிழில் நடிகர் சிலம்பரசன் TR கதாநாயகனாக நடித்த அலை திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான விக்ரம் குமார், தொடர்ந்து நடிகர் மாதவன் நடிப்பில் ஹாரர் த்ரில்லர் திரைப்படமாக இயக்கிய யாவரும் நலம் திரைப்படத்தின் மூலம் இந்திய அளவில் பலரது கவனத்தையும் ஈர்த்தார்.

தொடர்ந்து தெலுங்கு நடிகர் நாகேஸ்வரராவ் அவரது மகன் நாகார்ஜுனா மற்றும் பேரன் நாக சைதன்யா என மூன்று தலைமுறை நடிகர்களையும் இணைத்து விக்ர ம்குமார் இயக்கிய மனம் திரைப்படம்  பிளாக்பஸ்டர் ஆனது. இதனையடுத்து நடிகர் சூர்யாவின் நடிப்பில் விக்ரம் குமார் இயக்கிய 24 திரைப்படம் இந்திய அளவில் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்று மெகா ஹிட்டானது.

கடைசியாக தெலுங்கில் நடிகர் நானி கதாநாயகனாக நடித்து சூப்பர் ஹிட்டான கேங் லீடர் படத்தை இயக்கிய விக்ரம் குமார் இயக்கத்தில் அடுத்ததாக நடிகர் நாகசைதன்யா கதாநாயகனாக நடித்துள்ள தேங்க்யூ திரைப்படம் இந்த ஆண்டு விரைவில் ரிலீசாக உள்ளது. இதனிடையே இயக்குனர் விக்ரம் குமார் இயக்கத்தில் உருவாகும் புதிய வெப்சீரிஸின் அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்பு வெளியானது.

நடிகர் நாக சைதன்யா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் தூதா எனும் இந்த வெப் சீரிஸில் தற்போது நடிகைகள் பார்வதி மற்றும் பிரியா பவானி ஷங்கர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக. அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதர அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.