தமிழ் திரை உலகின் குறிப்பிடப்படும் சிறந்த இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் பா.ரஞ்சித் அட்டகத்தி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி அடுத்து இயக்கிய மெட்ராஸ் திரைப்படத்தின் மூலம் இந்திய அளவில் கவனத்தை ஈர்த்தார். இதனை அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை இயக்கும் வாய்ப்பைப் பெற்ற பா.ரஞ்சித் அடுத்தடுத்து கபாலி & காலா ஆகிய படங்களை இயக்கினார்.

கடைசியாக பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர்கள் பசுபதி மற்றும் ஆர்யா முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க வெளிவந்த சார்பட்டா பரம்பரை திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் வரவேற்பைப் பெற்றதோடு பலரது பாராட்டுகளையும் பெற்றது. அடுத்ததாக ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் பா.ரஞ்சித் இயக்கும் புதிய திரைப்படத்தில் சீயான் விக்ரம் கதாநாயகனாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக பா.ரஞ்சித் இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராம் மற்றும் துஷாரா விஜயன் இணைந்து நடித்துள்ள நட்சத்திரம் நகர்கிறது திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இயக்குனராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் சிறந்த படைப்புகளை தனது நீளம் புரொடக்ஷன்ஸ் வழியாக வழங்கி வருகிறார் பா.ரஞ்சித்.

இயக்குனர் மாரி செல்வராஜின் பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்த பா.ரஞ்சித் இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு மற்றும் ரைட்டர் உள்ளிட்ட திரைப்படங்களை தயாரித்துள்ளார். அந்தவகையில் மேலும் பா.ரஞ்சித்தின் உதவி இயக்குனர் சுரேஷ் மாரி இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படத்தையும் பா.ரஞ்சித் தயாரித்து வருகிறார்.

இந்நிலையில் பா.ரஞ்சித்தின் தயாரிப்பில் வெளிவரும் அடுத்த புதிய திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை (மார்ச் 29ஆம் தேதி) வெளியிடப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பா.ரஞ்சித் இயக்கியுள்ள நட்சத்திரம் நகர்கிறது திரைப்படத்தையும் தனது நீளம் புரொடக்ஷன் வாயிலாக தயாரித்துள்ளதால் வெளியாகும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நட்சத்திரம் நகர்கிறது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரா அல்லது பா.ரஞ்சித்தின் உதவி இயக்குனர் சுரேஷ் மாரி இயக்கத்தில் வெளிவரும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரா என சினிமா ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.