தென்னிந்திய திரை உலக ரசிகர்களுக்கும் பிரபலங்களுக்கும் அதிர்ச்சி தரும் வகையில் நேற்று ஜூன் 28-ம் தேதி இரவு வந்தது நடிகை மீனாவின் கணவர் உயிரிழந்த செய்தி. 48 வயதே ஆன மீனாவின் கணவர் வித்யாசாகர் மறைவுக்கு திரை உலக பிரபலங்களும் பொதுமக்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

நுரையீரலில் ஏற்பட்ட அலர்ஜியின் காரணமாக பாதிப்புக்குள்ளான வித்யாசாகர் கடந்த மார்ச் மாத இறுதியில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டார். இதனையடுத்து நுரையீரலில் ஏற்பட்ட அலர்ஜியின் பாதிப்பு மிகுந்த தீவிரமடைந்த நிலையில் உயர் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஆனால் சிகிச்சை பலனின்றி நுரையீரல் செயலிழப்பு காரணமாக வித்யாசாகர் அகாலமரணம் அடைந்தார். நடிகை மீனாவின் கணவர் மறைவுக்கு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், பிரபு தேவா, சினேகா, குஷ்பூ, அருண் விஜய், மன்சூர் அலிகான், இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், இயக்குனர் சுந்தர்.C, சரத்குமார் உள்ளிட்ட நேரில் வந்து இறுதி அஞ்சலி செலுத்தினர். குறிப்பாக கலா மாஸ்டர், ரம்பா, சங்கீதா உள்ளிட்டோர் இறுதிச் சடங்குகளில் நடிகை மீனா உடனிருந்தனர்.

இந்நிலையில் இன்று (ஜூன் 29) மாலை மீனாவின் கணவர் வித்யாசாகரின் இறுதி சடங்குகள் மற்றும் நல்லடக்கம் சென்னையில்  பெசன்ட் நகர் மயானத்தில் நடைபெற்றது. மீளா துயரில் இருக்கும் நடிகை மீனா மற்றும் அவரது குடும்பத்தாருக்கு கலாட்டா குழுமம் தனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவிக்கிறது.