இந்த ஆண்டின்(2022) ஈடு இணையற்ற வெற்றியாக தமிழ் திரையுலக வரலாற்றில் ஆல் டைம் ரெகார்டாக பாக்ஸ் ஆபீஸில் வசூல் சாதனை படைத்த திரைப்படம் இயக்குனர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன்-1. புகழ்மிக்க எழுத்தாளர் அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை தழுவி பிரம்மிப்பின் உச்சமாய் வெளிவந்தது பொன்னியின் செல்வன்.

பல முன்னணி ஜாம்பவான்களும் முயற்சி செய்து முடியாமல் கைவிட்ட இந்த கனவு படைப்பை கடின உழைப்போடு விடா முயற்சியோடு நிஜமாக்கிய இயக்குனர் மணிரத்னம் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இரண்டு பாகங்களாக உருவாக்கினார். மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா ப்ரொடக்ஷன்ஸ் இணைந்து வழங்கிய பிரம்மாண்டமான பொன்னியின் செல்வன் படத்திற்கு தோட்டா தரணி கலை இயக்குனராக பணியாற்றினார்.

பொன்னியின் செல்வனின் முன்னணி கதாபாத்திரங்களான ஆதித்த கரிகாலன், அருள்மொழிவர்மன் எனும் பொன்னியின் செல்வன், வல்லவரையன் வந்தியத்தேவன், நந்தினி, குந்தவை, ஆழ்வார்கடியான் நம்பி, பெரிய பழுவேட்டரையர், சின்ன பழுவேட்டரையர், சுந்தர சோழர், பூங்குழலி, ரவி தாசன், சேந்தன் அமுதன், பார்த்திபேந்திர பல்லவன், மதுராந்தகர் உள்ளிட்ட கதாபாத்திரங்களில் சீயான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஜெயராம், சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, கிஷோர், அஸ்வின் காக்கமன்னு, ரஹ்மான் ஆகியோர் நடித்துள்ளனர்.

ரவி வர்மனின் அற்புதமான ஒளிப்பதிவில், ஸ்ரீகர் பிரசாத்தின் கனக்கச்சிதமான படத்தொகுப்பில் உருவான பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். முன்னதாக ரசிகர்களால் கொண்டாடப்பட்ட பொன்னியின் செல்வன்-1 திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து பொன்னியின் செல்வன்-2 திரைப்படத்திற்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக பொன்னியின் செல்வன் பாகம் 2 திரைப்படம் அடுத்த ஆண்டு(2023) கோடை விடுமுறையை கொண்டாடும் வகையில் ஏப்ரல் 28ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் வெளியாகும் என தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அறிவிக்கும் வகையில் மிரட்டலான GLIMPSE வீடியோவும் வெளியானது. அந்த வீடியோ இதோ…