தமிழ் திரையுலகில் சிறந்த தயாரிப்பாளர்களில் ஒருவர் சுரேஷ் காமாட்சி. தற்போது STR நடிக்கும் மாநாடு திரைப்படத்தை தயாரித்து வருகிறார். வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தை சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் ப்ரோடுக்ஷன் தயாரிக்கிறது. 

யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ரிச்சர்ட் M நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். பிரவீன் KL எடிட்டிங் செய்யவுள்ளார். கல்யாணி ப்ரியதர்ஷினி ஹீரோயினாக நடிக்க SJ சூர்யா முக்கிய ரோலில் நடிக்கிறார். மேலும் பாரதிராஜா, SA சந்திரசேகர், கருணாகரன், உதயா, சுப்பு பஞ்சு, டேனியல் பாப், பிரேம்ஜி, YG மகேந்திரன், மனோஜ் பாரதிராஜா உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். 

கொரோனா வைரஸ் காரணமாக அறிவிக்கப்பட்ட லாக்டவுனுக்கு முன்பு சென்னை VGP கோல்டன் கடற்கரையில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு பாடல் காட்சி ஒன்று படமாக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து ஹைதராபாத் விரைவதாக இருந்தனர் படக்குழுவினர். 

லாக்டவுனில் இப்படம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை செய்திருந்தார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி. அதில், அனைவரும் மாநாடு அப்டேட் கேட்டு வருகிறீர்கள்...தற்போது உள்ள நிலையில், சினிமா துறை முழுவதுமே அரசின் உத்தரவுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அரசு அனுமதித்தால் மாநாடு படத்தின் படப்பிடிப்புக்கு ரெடியாகிவிடுவோம் என்று தெரிவித்திருந்தார்.

சமீபத்தில் லைவ்வில் தோன்றிய இயக்குனர் வெங்கட் பிரபு, மாநாடு படத்தின் ஷூட்டிங் பற்றியும், முதல் பாடல் பற்றியும் பேசியுள்ளார். மாநாடு படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் அதிக நபர்களை கொண்டுள்ளதால், ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் முதல் அதிக நபர்கள் தேவை படுகிறது என்று கூறியிருந்தார். ஒரு மாநாட்டில் நடக்கும் கதை என்பதால், அதற்கு ஏற்றார் போல் செட் அமைத்து ஷூட்டிங் நடத்த வேண்டும். தற்போது உள்ள சூழலில் சமூக இடைவெளி மிகவும் அவசியம். அதனால் அரசு அனுமதித்த பிறகே, இயல்பு நிலை திரும்பியவுடன் மாநாடு படப்பிடிப்பு துவங்கும் என்று கூறியுள்ளார். மேலும் படத்தின் முதல் பாடல் ரெடி. மதன் கார்க்கியின் வரிகளில் முதல் பாடல் சிறப்பாக வந்துள்ளது எனவும் கூறியிருந்தார். 

லாக்டவுனும் முடிந்தது. மாநாடு படம் தொடர்பான அப்டேட்டுகள் ஏதாவது கிடைக்காதா என்ற ஏக்கத்தில் உள்ளனர் திரை விரும்பிகள். இந்நிலையில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தற்போது உள்ள ட்ரெண்டில், நடிகர் நடிகையர்கள் அனைவரும் இந்த போட்டோஷூட் கலாச்சாரத்திற்கு மாறி வருகின்றனர். போட்டோக்களுக்கு ஏற்றார் போல் உடை அணிந்து, கண்ணாடி அணிந்து, ஸ்டைலாக போஸ் தந்து வருகின்றனர் திரை பிரபலங்கள். இதே ஃபார்முலாவை கையில் எடுத்துள்ளார் சுரேஷ் காமாட்சி. ஹீரோக்களுக்கு டஃப் தரும் அளவிற்கு கிளாஸாக போட்டோஷூட் செய்துள்ளார். சமீபத்தில் நடிகர் நாசர், மனோபாலா, மன்சூர் அலிகான், சரவணன் ஆகியோரின் போட்டோஷூட் புகைப்படங்கள் வைரலானது குறிப்பிடத்தக்கது.