தனது முதல் திரைப்படமான பரியேறும் பெருமாள் திரைப்படத்திலேயே ஒட்டுமொத்த திரையுலகின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தவர் இயக்குனர் மாரி செல்வராஜ். இதனையடுத்து நடிகர் தனுஷுடன் இணைந்த மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த கர்ணன் திரைப்படமும் மிகப்பெரிய வரவேற்பை பெற்று மெகாஹிட் ஆனது.

அடுத்ததாக இயக்குனர் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் மாமன்னன். ரெட் ஜெயன்ட் மூவிஸ் சார்பில் உதயநிதி ஸ்டாலின் தயாரித்து நடிக்கும் மாமன்னன் திரைப்படத்தில் வைகைப்புயல் வடிவேலு, ஃபகத் ஃபாசில் மற்றும் கீர்த்தி சுரேஷ் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் மாமன்னன் படத்திற்கு இசையமைக்கிறார்.

சமீபத்தில் தொடங்கப்பட்ட மாமன்னன் திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள நெஞ்சுக்கு நீதி திரைப்படம் வருகிற மே 20-ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. இயக்குனர் அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் நெஞ்சுக்கு நீதி படத்தில் உதயநிதி ஸ்டாலின் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார்.

பாலிவுட்டில் வெளிவந்து சூப்பர் ஹிட்டாகி விமர்சன ரீதியாகவும் பலரது பாராட்டுக்களைப் பெற்ற ஆர்டிகல் 15 படத்தின் தமிழ் ரீமேக்காக தயாராகியிருக்கும் நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தை போனிகபூர் தயாரித்துள்ளார். இந்நிலையில் நேற்று (மே 18) இயக்குனர் மாரி செல்வராஜ், உதயநிதி ஸ்டாலின் மற்றும் கீர்த்தி சுரேஷ் உட்பட மாமன்னன் படக்குழுவினர் நெஞ்சுக்கு நீதி படத்தின் சிறப்பு காட்சியை பார்வையிட்டனர்.

மேலும் நெஞ்சுக்கு நீதி படம் சிறப்பாக இருப்பதாக படக்குழுவினரை பாராட்டிய மாமன்னன் படக்குழுவினர் நெஞ்சுக்கு நீதி திரைப்படம் வெற்றிபெற வாழ்த்துக்கள்  தெரிவித்துள்ளனர்.