இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய பிறகு ராஜா ராணி என்ற படத்தின் மூலமாக இயக்குனராக களம் இறங்கியவர் அட்லி. முதல் படமே மிகப் பெரிய வரவேற்பு பெற்ற நிலையில் அதற்கு பிறகு தளபதி விஜய் உடன் தொடர்ந்து மூன்று வெற்றி படங்களில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. தெறி, மெர்சல், பிகில் என விஜய்யுடன் அவர் கூட்டணி சேர்ந்த மூன்று படங்களுமே நல்ல வரவேற்பை பெற்றது. பாக்ஸ் ஆபிஸிலும் அதிக வசூலைக் குவித்தது.

அட்லீயின் முதல் படமான ராஜா ராணி படத்தில் எமோஷனலாக காட்சிகள் தான் அதிகம் இருக்கும். அதிலும் ஆர்யாவின் காதலி நஸ்ரியா விபத்தில் சிக்கும் காட்சியை பார்த்து நம் மனமே கலங்கி இருக்கும். அந்த அளவுக்கு தத்ரூபமாகவும், நெஞ்சை உருக்கும் வகையிலும் எமோஷனலாக காட்டி இருப்பார் அட்லீ.

தளபதி விஜய் போலீஸ் அதிகாரியாக இருந்து அதன் பின் ஏதோ சில காரணங்களுக்காக கேரளாவுக்கு சென்று பேக்கரி நடத்தி வருவது போல கட்டப்படும். அதை பற்றி எமி ஜாக்சன் ஒரு சமயத்தில் தெரிந்துகொண்டு வந்து அவரிடம் கேட்பார். அப்போது பிளாஷ் பேக் காட்சிகள் துவங்கும். அதற்கு முன்பு விஜய்யின் போலீஸ் தோற்றத்தை அட்லீ மிரட்டலான வகையில் நமக்கு இன்ட்ரோ செய்து இருப்பார். அதில் ஜி.வி.பிரகாஷின் இசையும் முக்கிய பங்கு வகித்தது.

விஜய்யுடன் தெறி படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக கூட்டணி சேர்ந்தார் அட்லீ. அதனால் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. படத்தின் துவக்கத்தில் வரும் மேஜிக் ஷோ காட்சி விஜய் ரசிகர்களை நிச்சயம் மெர்சல் ஆகி இருக்கும். விஜய் வில்லனை கொல்லும் போது சொல்லும் நீ பற்ற வைத்த நெருப்பொன்று..ரசிகர்களை மிகப்பெரிய அளவில் கவர்ந்தது.

மெர்சல் படத்தில் விஜய் மூன்று கதாபாத்திரங்களில் நடித்து இருந்தார். அந்த படத்தின் பிளாஷ்பேக் காட்சிகளில் காட்டப்படும் வெற்றிமாறன் ரோல் பெரிதும் விஜய் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. அதில் ஒரு தியேட்டர் சண்டை காட்சியில் விஜய் கதவை உடைத்து கொண்டு தியேட்டரில் வரும்போது பின்னணியில் எம்ஜிஆர் படம் தியேட்டரில் ஓடிக்கொண்டு இருக்கும். விஜய்யின் நடிப்பும் சில இடங்களில் ரசிகர்களுக்கு எம்ஜிஆர் படங்களை தான் நியாபகப்படுத்தி இருக்கும்.

கடைசியாக வெளியான பிகில் திரைப்படத்தில் விஜய் அப்பா, மகன் என இரண்டு ரோல்களில் நடித்து இருப்பார். அதில் அப்பா கதாபாத்திரமான ராயப்பன் படத்தில் குறைந்த நேரம் மட்டுமே வந்தாலும் ரசிகர்களை அதிகம் ஈர்த்தது. தனியாக தனது எதிரிகளின் இடத்திற்கே சென்று அங்கு அவர்களை துவம்சம் செய்துவிட்டு திரும்பும் காட்சி விஜய் ரசிகர்களை மெர்சல் ஆக்கியது. விஜய் முதல் முறையாக இப்படி வயதான தோற்றத்தில் நடித்திருந்ததும் அனைவரையும் கவர்ந்தது. பாக்ஸ் ஆபிசில் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்த படங்களில் இதுவும் ஒன்றாக அமைத்தது.

இன்று அட்லியின் 33 ஆவது பிறந்தநாள் என்பதால் அவருக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அனைவரும் வாழ்த்து கூறி வருகிறார்கள். இந்நிலையில் அட்லீயின் பிறந்தநாளை முன்னிட்டு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் காமன் DP-யை வெளியிட்டு அசத்தியுள்ளார். 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி இணைந்து நடித்துள்ள படம் மாஸ்டர். லாக்டவுன் அறிவிப்பதற்கு முன்பே படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதிக எதிர்பார்ப்பில் உள்ள இந்த படத்தின் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகளை துவங்கியுள்ளனர் படக்குழுவினர். 

மாளவிகா மோகனன், ஷாந்தனு, அர்ஜுன் தாஸ், தீனா, சேத்தன், கௌரி கிஷன் ஆகியோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். அனிருத் இசையில் பாடல்கள் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. சமீபத்தில் பாடல்களின் கரோக்கி வெர்ஷனும் வெளியானது. ஏப்ரல் 9-ம் தேதி தமிழ் புத்தாண்டு ஸ்பெஷலாக மாஸ்டர் படம் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்குள் கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் அதிகம் பரவிய காரணத்தினால் தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டு விட்டன. அதனால் இந்த படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் தயாரிப்பாளர் தள்ளி வைத்துள்ளார்.