தமிழ் திரையுலகின் குறிப்பிடப்படும் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் லிங்குசாமி ஆனந்தம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர். தொடர்ந்து லிங்குசாமி இயக்கத்தில் வெளிவந்த ரன் சண்டக்கோழி, பீமா, பையா மற்றும் வேட்டை உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று சூப்பர் ஹிட் ஆனது. 

இருப்பினும் கடைசியாக லிங்குசாமி இயக்கத்தில் வெளிவந்த அஞ்சான் மற்றும் சண்டக்கோழி 2 ஆகிய திரைப்படங்கள் கலவையான விமர்சனங்களை சந்தித்தது. இந்த நிலையில் தனது கம்பேக் திரைப்படமாக இயக்குனர் லிங்குசாமி தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் இயக்க தி வாரியர் படம் தயாராகி வருகிறது. 

முன்னணி தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி, காவல் துறை அதிகாரியாக, கதாநாயகனாக நடிக்கிறார். கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கும் தி வாரியர் படத்தில் மிரட்டலான வில்லனாக நடிகர் ஆதி நடிக்க, அக்ஷரா கௌடா மற்றும் ஜெயப்பிரகாஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் நிறுவனம் தயாரிக்கும் தி வாரியர் திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. சுஜித் வாசுதேவ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார். இந்நிலையில் தி வாரியர் படம் வருகிற ஜூலை 14ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.