இந்திய திரையுலகை முன்னணி நடிகைகளில் ஒருவராக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நட்சத்திர நாயகர்களுடன் இணைந்து  200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர் நடிகை குஷ்பூ. கடைசியாக தமிழில்  சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்தில் குஷ்பூ முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

வெள்ளித்திரையில் முன்னணி கதாநாயகியாக ஜொலித்த நடிகை குஷ்பூ சின்னத்திரையிலும் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு தொகுப்பாளராகவும் நடுவராகவும் கலந்துகொண்டு கலக்கியவர். குறிப்பாக தமிழில் பல மெகா தொடர்களில் நடித்து சீரியல் ரசிகர்களின் இதயங்களில் நீங்கா இடம் பிடித்த குஷ்பூ தயாரிப்பாளராகவும் சினிமாவில் பத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களை தயாரித்துள்ளார். 

இதனையடுத்து நடிகை குஷ்பூ நடிக்கும் புதிய மெகா தொடரான மீரா சீரியலின் படப்பிடிப்பு சில வாரங்களுக்கு முன் தொடங்கியது. முன்னணி தமிழ் தொலைக்காட்சிகளில் ஒன்றான கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள மீரா மெகா தொடரில் கதாசிரியராகவும் குஷ்பூ பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

நடிகை குஷ்பூ மற்றும் நடிகர் சுரேஷ் மேனன் இணைந்து முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் மீரா மெகா தொடரின் ப்ரோமோ வீடியோ சமீபத்தில் ரிலீசாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்ப்படுத்தியுள்ள நிலையில்,  வருகிற மார்ச் 28-ம் தேதி முதல் இரவு 9.30 மணிக்கு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் மீரா சீரியல் ஒளிபரப்பாகும் என தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.