தமிழ் சினிமாவின் குறிப்பிடப்படும் இயக்குனர்களில் ஒருவராக திகழும் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் தனது முதல் படமான பீட்சா திரைப்படத்திலேயே ஒட்டுமொத்த திரையுலகின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பினார். இதனை அடுத்து இவர் இயக்கிய ஜிகர்தண்டா திரைப்படமும் இந்திய அளவில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

தொடர்ந்து இறைவி, மெர்குரி என வெரைட்டியான படங்களை கொடுத்து வந்த இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் முதல் முறை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்த பேட்ட திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இதனையடுத்து தனுஷுடன் ஜகமே தந்திரம் திரைப்படத்தை இயக்கிய, கார்த்திக் சுப்புராஜ் கடைசியாக சீயான் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் இணைந்து நடித்த மகான் திரைப்படத்தை இயக்கினார்.

தற்போது பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் கதாநாயகனாக நடிக்க, தயாராகி வரும் RC15 திரைப்படம் கார்த்திக் சுப்பராஜின் கதையில் தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக ஜிகர்தண்டா-2 படத்திற்கான முதற்கட்ட பணிகளில் கார்த்திக் சுப்புராஜ் கவனம் செலுத்தி வருகிறார். இதனிடையே நமது கலாட்டா சேனலுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், “தளபதி விஜய் உடனான படம் நடக்காதது ஏன்?” என்பது குறித்து கார்த்திக் சுப்பராஜ் பதிலளித்துள்ளார்.

தளபதி விஜய் உடனான படம் எப்போது நடக்கும் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, "அதை அவர்தான் முடிவு செய்ய வேண்டும்.. அவரிடம் ஒரு கதை சொல்லி இருக்கிறேன்… ஆனால் அது அப்போது சரியாக அமையவில்லை… விஜய் சாரோட எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லை… அது எனக்கும் புரிந்தது.. அந்த கதை சொல்லி ரொம்ப வருஷம் இருக்கும்..” என கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார். அந்த வீடியோ இதோ…