கதைதேர்வில் எப்போதும் வித்தியாசம் காட்டும் நடிகர்களில் ஒருவர் கார்த்தி.ரெமோ பட இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் இவர் நடிப்பில் வெளியான சுல்தான் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இதனை தொடர்ந்து இவர் மணி ரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன்,பி எஸ் மித்ரன் இயக்கத்தில் சர்தார்,முத்தையா இயக்கத்தில் விருமன் உள்ளிட்ட படங்களில் அடுத்து நடித்து வருகிறார்.இதில் பொன்னியின் செல்வன்,விருமன் படங்களின்  படப்பிடிப்பை கார்த்தி நிறைவு செய்துள்ளார்.

இரும்புத்திரை,ஹீரோ உள்ளிட்ட படங்களை இயக்கிய பி.எஸ்.மித்ரன் இயக்கும் சர்தார் படத்தில் கார்த்தி ஹீரோவாக நடிக்கிறார்.ஜீ.வி.பிரகாஷ் குமார் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.பிரின்ஸ் பிக்சர்ஸ் இந்த படத்தினை தயாரிக்கின்றனர்.இந்த படத்தில் கார்த்தி இரட்டை வேடங்களில் நடிக்கிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது.

ரஜிஷா விஜயன்,ராஷி கண்ணா,லைலா ஆகியோர் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இந்த படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது.கார்த்தி நடிக்கும் படங்களிலேயே அதிக பட்ஜெட் படமாக இந்த படம் உருவாகியுள்ளது.சமீபத்தில் இதன் படபிடிப்பு அசர்பைசான் நாட்டில் நடந்தது. இதில் மிரட்டும் வில்லனாக இந்தி நடிகர் சங்கி பாண்டே நடிக்கிறார்.இவர் சம்பந்தப்பட்ட முக்கியமான காட்சிகளுக்காக மட்டுமே அசர்பைசான் சென்று படமாக்கினார்கள்.

இது வரை ஷூட்டிங் எடுக்கப்படாத அசர்பைசான் பாராளுமன்றத்திலேயே  ஷூட்டிங் நடத்தப்பட்டது. பாராளுமன்றம் நடைபெறுவது போலவும், அதில் வில்லன் சங்கி பாண்டே சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டது. மற்றும் பல இடங்களில் படமானது. இதையடுத்து ஜார்ஜியாவிலும்  படமாக்கப்பட்டது. இந்த இரு இடங்களில் நடைபெற்ற காட்சிகளுக்காக மட்டுமே ரூபாய் 4 கோடி செலவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து சென்னையில் விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.