தமிழ் திரை உலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான நடிகர் கார்த்தி அடுத்ததாக குக்கூ, ஜோக்கர், ஜிப்ஸி ஆகிய படங்களின் இயக்குனர் ராஜுமுருகன் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இத்திரைப்படம் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

முன்னதாக இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்ட படைப்பாக தயாராகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வந்தியத்தேவன் கதாப்பாத்திரத்தில் கார்த்தி நடித்துள்ளார். பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல்பாகம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது.

மேலும் இயக்குனர் PS.மித்ரன் இயக்கத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் கார்த்தி நடித்துள்ள சர்தார் திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் தீபாவளி வெளியீடாக ரிலீஸாகவுள்ளது.இதனிடையே இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்திருக்கும் விருமன் திரைப்படம் சில தினங்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளது. 

சூர்யா & ஜோதிகாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள விருமன் திரைப்படத்தில் இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார். மேலும் பிரகாஷ்ராஜ், ராஜ்கிரண், சூரி, சிங்கம்புலி, இளவரசு, வடிவுகரசி, R.K.சுரேஷ், கருணாஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

விருமன் திரைப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்நிலையில் விருமன் திரைப்படத்திலிருந்து இதுவரை வெளியிடப்படாத ஆகாசம் கண்ணுக்குள்ள பாடல் தற்போது வெளியானது. இப்பாடலை இசைஞானி இளையராஜா பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இசைஞானியின் குரலில் மனதை மயக்கும் அந்த பாடல் இதோ…