என்றென்றும் கலையின் மீது ஒரு தீரா தாகத்தோடு ஒவ்வொரு முறையும் ரசிகர்களின் ரசனையை மெருகேற்றும் வகையில் ஆகச்சிறந்த படைப்புகளை வழங்கி வரும் உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் கடைசியாக வெளிவந்த விக்ரம் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது கமல்ஹாசனின் தீவிர ரசிகரான இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த விக்ரம் திரைப்படம் ஆல் டைம் ரெகார்டாக பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனையும் படைத்தது.

தற்போது பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வரும் உலக நாயகன் கமல்ஹாசன் அடுத்ததாக நாயகன் படத்திற்கு பிறகு 35 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் புதிய படத்தில் மணிரத்னத்துடன் இணைகிறார். கமல்ஹாசனின் 234வது படமாக தயாராகும் KH234 படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ், ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து வழங்கவுள்ளன. 

தொடர்ந்து ஃபகத் ஃபாசில் நடித்த மாலிக் படத்தின் இயக்குனர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். சினிமா மட்டுமல்லாமல் அரசியலிலும் கவனம் செலுத்தி வரும் கமல்ஹாசன் அவர்கள் மக்கள் நீதி மையம் கட்சியின் நிறுவனராகவும் திகழ்கிறார்.

அந்த வகையில் தற்போது காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி அவர்களுடன் தற்போது கைகோர்த்துள்ளார். முன்னதாக இந்தியா முழுவதும் இந்திய ஒற்றுமை பயணத்திற்காக நடை பயணம் மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி அவர்களுடன் இணைந்து வருகிற டிசம்பர் 24ஆம் தேதி தானும் ஒற்றுமை பயணத்தில் இணைய உள்ளதாக கமல்ஹாசன் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.