தமிழ் சினிமாவின் குறிப்பிடப்படும் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் பூமி. நடிகர் ஜெயம் ரவியின் 25-வது திரைப்படமாக வெளிவந்த பூமி திரைப்படம் நேரடியாக டிஸ்னி ப்லஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் ரிலீசானது.

அடுத்ததாக இயக்குனர் மணிரத்தினத்தின் இயக்கத்தில் பிரம்மாண்ட படைப்பாக உருவாகி இருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் அருள்மொழிவர்மன் என்கிற பொன்னியின் செல்வன் கதாபாத்திரத்தில் ஜெயம் ரவி நடித்துள்ளார். வருகிற செப்டம்பர் 30ஆம் தேதி பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் வெளிவரவுள்ளது.

சீயான் விக்ரம், கார்த்தி, பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யாராய், த்ரிஷா, பார்த்திபன், ஜெயராம், விக்ரம்பிரபு, சரத்குமார், பிரபு, நிழல்கள் ரவி, ரஹ்மான் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்ய, இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். 

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இறுதிகட்ட பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. தொடர்ந்து ஜெயம் ரவியின் நடிப்பில் அகிலன் படமும் விரைவில் ரிலீசாக தயாராகி வருகிறது. இந்நிலையில் நடிகர் ஜெயம் ரவியின் தீவிர ரசிகர் ஒருவர் உயிரிழந்த செய்தி கேட்டு அவரது வீட்டிற்கு சென்று ஜெயம் ரவி கண்ணீர் அஞ்சலி செலுத்தியுள்ளார். 

உயிரிழந்த ரசிகரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்த ஜெயம்ரவி அவர்களது உடன்பிறந்தவர்களின் படிப்பிற்கான மொத்த செலவையும் தானே ஏற்பதாக உறுதியளித்துள்ளார். ஜெயம்ரவியின் இந்த பேருதவி பலரது பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.