சம கால இந்திய சினிமாவில் கவனிக்கத்தக்க இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் வெற்றி மாறன். முதல் படம் ‘பொல்லாதவன்’ தொடங்கி சமீபத்தில் வெளியான ‘அசுரன்’ வரை வெற்றிமாறன் பெயருக்கேற்றார் போல் வெற்றியை மட்டுமே சுவைத்து வருகிறார். ஒவ்வொரு திரைப்படமும் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகபெரிய வெற்றியை பெற்று கொண்டாடப் பட்டாலும் அதே நேரத்தில் விருதுகளையும் வெற்றிமாறன் விட்டு வைப்பதில்லை. ஆம், முதல் படம் தொடங்கி ஒவ்வொரு படம் வெளியானாலும் ரசிகர் மனதில் தோன்றும் முதல் எண்ணம் நிச்சயம் இந்த படம் விருதுகளை அடிக்கும் என்பது தான். அந்த அளவு படங்களில் தரமும் எதார்த்தமும் நிறைந்து ரசிக்கும் படி இருக்கும். அதன்ப்படி தற்போது வெற்றி மாறன் இயக்கிய ‘விடுதலை – முதல் பாகம்’ வரும் மார்ச் 31 வெளியாகவுள்ள நிலையில் வெற்றிமாறன் அடுத்தடுத்து திரைத்துறையில் இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் எழுத்தாளராகவும் பயணிக்க போகும் படங்கள் குறித்து விளக்குகிறது இந்த சிறப்பு தொகுப்பு..
விடுதலை 2
நடிகர் சூரி மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் இளையராஜா இசையில் உருவாகியுள்ள 'விடுதலை' திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. அதன் படி எழுத்தாளர் ஜெயமோகனின் ‘துணைவன்’ சிறுகதையை இரண்டு பாகங்களாக இயக்கியுள்ளார் இயக்குனர் வெற்றிமாறன். முதல் பாகம் வரும் மார்ச் 31 ம் தேதி வெளியாகவுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இரண்டாம் பாகம் முடிந்த நிலையில் அவை இந்த ஆண்டின் இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
வாடிவாசல்
தயாரிப்பாளர் தாணு தயாரிப்பில் நடிகர் சூர்யா நடிக்கவிருக்கும் திரைப்படம் ‘வாடிவாசல்’ ஜல்லிக்கட்டு சார்ந்த கதைகளத்தில் உருவாகவுள்ள இப்படத்திற்கான முன்னோட்ட படப்பிடிப்பு சமீபத்தில் நடந்தது. பின் சில காரணங்களுக்காக படத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளார் இயக்குனர் வெற்றிமாறன். மேலும் நடிகர் சூர்யா தற்போது காளை மாடுகளை படத்திற்காக வளர்த்தும் வருகிறார். விடுதலை இரண்டு பாகங்களும் வெளியான பின் சூர்யா – வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகவுள்ள வாடிவாசல் படப்பிடிப்பு தொடங்கும் என்று தெரிவித்துள்ளார் இயக்குனர் வெற்றிமாறன்.
வடசென்னை 2
2018 ல் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்று இரண்டாம் பாகம் எப்போது என்று ரசிகர்கள் ஆரவராத்திற்கு உள்ளான திரைப்படம் 'வடசென்னை'. தனுஷ் நடிப்பில் வடசென்னை கதைகளத்தை சார்ந்து உருவாகிய இப்படம் வெளியானதில் இருந்து இன்று வரை மக்கள் மத்தியில் பேசு பொருளாக இருந்து வருகிறது. அட்டகாசமான கதைகளத்தை இரண்டு பாகங்களாக திட்டமிட்ட வெற்றிமாறன் இரண்டாம் பாகம் எடுக்க நேரம் எடுத்து உள்ளார். மேலும் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு வாடிவாசல் படத்திற்கு பின் தொடங்கப்படும் என்று சமீபத்தில் தெரிவித்திருந்தார் வெற்றிமாறன்.
அதிகாரம்
வெற்றிமாறன் எழுத்தில் எதிர்நீச்சல், காக்கி சட்டை, கொடி ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் துரை செந்தில் குமார் இயக்கத்தில் உருவாகவுள்ள திரைப்படம் ‘அதிகாரம்’ . இப்படத்தில் கதாநாயகனாக நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்கவிருக்கிறார். இப்படத்திற்கு கதை மற்றும் திரைக்கதை மட்டுமல்லாமல் படத்தை இணை தயாரிப்பும் செய்து வருகிறார். முன்னதாக படத்தின் முதல் பார்வை வெளியாகி ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை தூண்டியது. விரைவில் இந்த படம் திரையரங்கிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இறைவன் மிகப் பெரியவன்
நீண்ட இடைவெளிக்கு பின் இயக்குனர் அமீர் இயக்கவிருக்கும் திரைப்படம் ‘இறைவன் மிகப்பெரியவன்’ யுவன் சங்கர் ராஜா இசையில் நடிகர் சூரி மற்றும் ஆர்யாவின் சகோதரர் சத்யா இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கின்றனர். இப்படத்திற்கு கதையை தங்கம் அவர்களுடன் இணைந்து இயக்குனர் வெற்றிமாறன் எழுதியுள்ளார். விரைவில் இந்த படம் படமாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மனுஷி
தமிழ் சினிமாவில் மிக முக்கியமான திரைப்படம் ‘அறம்’ அட்டகாசமான திரைப்படத்தை கொடுத்து மக்கள் மத்தியில் புகழ்பெற்றவர் இயக்குனர் கோபி நயினார் . தற்போது இவர் நீஇயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில் நீண்ட இடைவெளிக்கு பின் நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரமாக வைத்து இயக்கவுள்ள திரைப்படம் ‘மனுஷி’. இப்படத்தின் முதல்பார்வை முன்னதாக வெளியாகி எதிர்பார்ப்பை அதிகரித்தது. நிச்சயம் இந்த படமும் அறம் படம் போல் நல்ல வரவேற்பை பெறும் என்று ரசிகர்கள் எதிர்பார்கின்றனர்.
நிலமெல்லாம் ரத்தம்
இயக்குனர் வெற்றிமாறன் எழுத்தில் இயக்குனர் ரமேஷ் பாலகிருஷ்ணா இயக்கவுள்ள இணைய தொடர் ‘நிலமெல்லாம் ரத்தம்’ இப்படத்தில் இயக்குனர் அமீர் ஹீரோவாக நடிக்கின்றார். ஜீ 5 தயாரிக்கும் இந்த தொடருக்கு இசையமைக்கிறார் யுவன் சங்கர் ராஜா. மேலும் அதில் இரண்டு எபிசோடுகளை இயக்குனர் வெற்றிமாறன் இயக்கவுள்ளார். இந்த படத்திற்கான டைட்டில் வெளியீடு கடந்த ஆண்டு நடைபெற்றது. விரைவில் படமாக்கப் பட்டு ஜீ 5 தளத்தில் வெளியாகும்.
அஜ்னபி
அரபு நாடுகளுக்கு சென்று வேலை பார்க்கும் இந்தியர்களின் உணர்வுபூர்வமான ஆவணமான மீரான் மைதீன் 'அஜ்னபி' நாவலை திரைகதையாய் மாற்றி இயக்குனர் வெற்றிமாறன் திட்டமிட்டிருந்தார். சில காரணங்களினால் தடைபட தற்காலிகமாக அந்த திட்டத்தை நிறுத்தி வைத்துள்ளார்.
பட்டாம்பூச்சி விற்பவன்
மறைந்த பிரபல தமிழ் சினிமா பாடலாசிரியரும் எழுத்தாளருமான நா.முத்துகுமாரின் ‘பட்டாம்பூச்சி விற்பவன்’ சிறுகதைகளில் தொகுப்பில் ஒரு தொகுப்பில் வயதான மனிதர் இறந்தவுடன் அவரது இறுதிசடங்கிற்கு முன் நடக்கும் சம்பவங்களை தழுவி இயக்குனர் வெற்றிமாறன் திரைக்கதையாய் மாற்றியுள்ளார். இந்த தொகுப்பில் உருவாக்கப்பட்ட கதையை நடிகர் சூரியை வைத்து இயக்க முன்னதாக திட்டமிட்டிருந்தார். இதனிடையே விடுதலை படம் எடுக்க திட்டமிட்டுள்ளதால் இந்த படம் தற்காலிமாக நிறுத்தி வைத்துள்ளார். விரைவில் இந்த படத்திற்காக மீண்டும் நடிகர் சூரியுடன் இணைய வாய்ப்பு உள்ளது.
ராஜன் வகையறா
வடசென்னை படத்தில் வரும் மிக முக்கியமான கதாபாத்திரம் ராஜன். இதை ஏற்று நடித்தவர் இயக்குனர் அமீர். படம் வெளியான போது மிகப்பெரிய அளவு பேசப்பட்ட கதாபாத்திரம் இது. இந்த கதாபாத்திரத்தை மேலும் பல சம்பவங்களுடன் சேர்த்து திரைக்கதை அமைத்து 'ராஜன் வகையறா' என்ற பெயரில் இணைய தொடராக உருவாக்க வெற்றிமாறன் திட்டம் வைத்துள்ளார். தற்போது பல படங்கள் கையிருப்பில் இருப்பதால் இந்த தொடர் உருவாக சற்று காலம் ஆகும். இது வடசென்னை படத்தின் முந்தைய பாகமாக இருக்ககூடும் என்பது கூடுதல் தகவல்
விஜய்
தமிழ் சினிமாவின் உச்ச நடிகரான தளபதி விஜயுடன் இயக்குனர் வெற்றிமாறன் கூட்டணி அமைக்கவுள்ளதாக முன்னதாக வெற்றிமாறன் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். ஆனால் இருவரும் நிறைய படங்களில் தற்போது பணியாற்றி வருவதால் இந்த கூட்டணி தற்போது நிகழ வாய்ப்பு குறைவு. வரும் காலங்களில் உறுதியாக இந்த கூட்டணி அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரஜினிகாந்த்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் இளம் இயக்குனர்களுக்கு அதிகம் வாய்புகள் கொடுத்து வருகிறார் பா ரஞ்சித் தொடங்கி சமீபத்தில் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருவது வரை.. அதன்படி ரஜினிகாந்த் இயக்குனர் வெற்றி மாறனிடம் முன்னதாக கதை கேட்டார். ‘ஷூஸ் ஆப் டெத்’ என்ற புத்தகத்தை தழுவி இருக்கும் அரசியல் திரைப்படமாக அது இருந்ததால் ரஜினி அதை அன்று மறுத்து விட்டார். ஆனால் வருங்காலத்தில் இந்த கூட்டணி அமையும் என்று எதிர்பார்க்கபடுகிறது.
கமல் ஹாசன்
சமீப காலமாக கமல் ஹாசனுடனான தொடர் சந்திப்பில் இயக்குனர் வெற்றிமாறன் இருந்து வருகிறார். கமல் ஹாசனும் சமீபத்தில் இளம் இயக்குனருடன் இணைந்து பணியாற்றி வருகிறார். அதன்படி அடுத்தடுத்த காலங்களில் வெற்றி மாறன் இயக்கத்தில் கமல் ஹாசன் உறுதியா நடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தனுஷ்
மீண்டும் இயக்குனர் வெற்றிமாறன் தனுஷுடன் இணைந்து பணியாற்றவுள்ளதாக பல மேடைகளில் தெரியப் படுத்தி வந்திருந்தார். வடசென்னை 2 படத்தை தொடர்ந்து மீண்டும் இணைய போகும் இந்த கூட்டணி இந்த முறையும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. சமீபத்தில் இந்த படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் அதனை ஜூனியர் என்டிஆர் தரப்பினர் மறுத்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.