இந்திய சினிமாவின் குறிப்பிடப்படும் இயக்குனர்களில் ஒருவராகவும் தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனராகவும் திகழும் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த அசுரன் திரைப்படம் சிறந்த நடிகர் மற்றும் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதுகளை பெற்றது. இதனையடுத்து நெட்பிளிக்ஸில் நேரடியாக ரிலீஸான பாவக் கதைகள் ஆந்தாலஜி படத்தில் ஓர் இரவு எனும் எபிசோடை இயக்கினார்.

தொடர்ந்து இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் லாரன்ஸ் நடிக்கும் அதிகாரம் படத்திற்கு திரைக்கதை அமைத்து தயாரிக்கும் வெற்றிமாறன் இயக்குனர் அமீர் இயக்கத்தில் உருவாகும் இறைவன் மிகப்பெரியவன் படத்திலும் திரைக்கதை வசனம் எழுதியுள்ளார். முன்னதாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் சூரி இணைந்து நடிக்கும் விடுதலை திரைப்படத்தை வெற்றிமாறன் தற்போது இயக்கி வருகிறார்.

அடுத்ததாக கலைபுலி.எஸ்.தாணு அவர்களின் வி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் நடிகர் சூர்யா கதாநாயகனாக நடிக்கும் வாடிவாசல் திரைப்படத்தை வெற்றிமாறன் இயக்கவுள்ளார். இத்திரைப்படத்தின் அறிவிப்பு வெளிவந்து 2 ஆண்டுகளை கடந்த நிலையில் விரைவில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜூன்-ஜூலையில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எழுத்தாளர் C.S.செல்லப்பா எழுதிய வாடிவாசல் நாவலை அடிப்படையாக கொண்டு உருவாகும் வாடிவாசல் திரைப்படத்தில் இயக்குனர் அமீர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

R.வேல்ராஜ் மற்றும் ஜாக்கி ஒளிப்பதிவு செய்ய GV பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இந்நிலையில் ட்விட்டரில் #AskGV-ல் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த ஜீவி பிரகாஷ் குமார் வாடிவாசல் மற்றும் இயக்குனர் வெற்றிமாறன் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, “இயக்குனர் வெற்றிமாறனுடன் இணைந்து பணியாற்றுவது நிச்சயம் வெற்றிகரமானதாக இருக்கும். இப்போது மீண்டும் இணைந்து வாடிவாசல் படத்தில் பணியாற்றி வருகிறேன். 2-3 பாடல்கள் முடித்துவிட்டோம். முழுக்க முழுக்க நாட்டுப்புற இசையில் பாடல்களும் பின்னணி இசையும் அமைக்கப்பட்டிருக்கிறது” என தெரிவித்துள்ளார்.

வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் வாடிவாசல் திரைப்படம் ஜல்லிக்கட்டு மற்றும் மனிதனுக்கும் காளைக்கும் இடையிலான உறவைப் பற்றிப் பேசும் அழுத்தமான திரைப்படமாக தயாராக உள்ள நிலையில் அதன் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளது. வாடிவாசல் குறித்து ஜீவி பிரகாஷ் குமார் பேசிய வீடியோ இதோ…