தமிழ் திரை உலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராகவும் சிறந்த நடிகராக விளங்கும் நடிகர் சூர்யா சிறந்த தயாரிப்பாளராகவும் தனது 2டி என்டர்டெயின்மென்ட் சார்பில் சிறந்த திரைப்படங்களையும் வழங்கி வருகிறார் அந்த வகையில் கடைசியாக சூர்யா தயாரித்து நடித்து வெளிவந்த ஜெய்பீம் திரைப்படம் உலக அளவில் பலராலும் பாராட்டப்பட்டது.

நடிகர் சூர்யா நடித்து கடைசியாக வெளிவந்த சூரரைப்போற்று மற்றும் ஜெய்பீம் ஆகிய திரைப்படங்கள் நேரடியாக அமேசான் பிரைம் வீடியோவில் ரிலீஸ் ஆன நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்கியுள்ளார்.

வருகிற மார்ச் 10ஆம் தேதி உலகெங்கும் எதற்கும் துணிந்தவன் படம் ரிலீஸாக உள்ள நிலையில் அடுத்ததாக இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் வாடிவாசல் திரைப்படத்தில் சூர்யா கதாநாயகனாக நடிக்க உள்ளார். கலைப்புலி.எஸ்.தாணு அவர்கள் தயாரிப்பில் உருவாகும் வாடிவாசல் படத்திற்கு ஜீவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

முன்னதாக மீண்டும் இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கும் புதிய திரைப்படத்தின் அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இப்படத்திற்கும் இசை அமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஜீவி பிரகாஷ் குமார், இயக்குனர் பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் குறித்த முக்கிய தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

ட்விட்டரில் #AskGV-ல் ரசிகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த ஜீவி பிரகாஷ் குமார், "இயக்குனர் பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் திரைப்படம் ரொம்ப ஸ்பெஷலான ப்ராஜெக்ட், கிட்டத்தட்ட 4-5 பாடல்கள் முடித்துவிட்டோம். ரொம்ப முக்கியமான திரைப்படம் ஆனால் இத்திரைப்படம் குறித்து வேறெந்த விஷயங்களையும் இப்போதே பகிர்ந்துகொள்ள முடியாது. அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும். ஆனால் இசையைப் பொருத்தவரை படப்பிடிப்பிற்கு முன்னதாக அனைத்து பாடல்களையும் முடித்து தருவதாக தெரிவித்துள்ளேன்" என தெரிவித்துள்ளார். விரைவில் திரைப்படம் குறித்த அடுத்தடுத்து அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.