திரையுலகில் கிளாஸான இயக்குனர் என ரசிகர்களால் போற்றப்படுபவர் இயக்குனர் கெளதம் மேனன். உணர்வுபூர்வ உரையாடல், மைன்ட் வாய்ஸ் வசனங்கள் மற்றும் ஸ்டஃப்ஸ் இவையனைத்தும் ஓர் படத்தில் கொண்டு வர கௌதம் மேனனால் மட்டுமே முடியும் என்பதை தன் ஒவ்வொரு படங்களின் மூலம் நிரூபிக்கிறார். 

கடந்த ஆண்டு கொரோனா காரணமாக அறிவிக்கப்பட்ட லாக்டவுனில் சிலம்பரசன் மற்றும் த்ரிஷா வைத்து கார்த்திக் டயல் செய்த எண் குறும்படத்தை இயக்கி ட்ரெண்ட் செட் செய்தார். அதன் பிறகு ஒரு ஒரு சான்ஸ் குடு பாடல் ஆகியவற்றை இயக்கினார். இதில் ஷாந்தனு, மேகா ஆகாஷ், கலையரசன் ஆகியோர் நடித்திருத்தனர். அதன் பிறகு நெட்ஃபிளிக்ஸ் தயாரித்த பாவக்கதை ஆந்தாலஜியை இயக்கி நடித்திருந்தார் கெளதம் மேனன். இதில் வான்மகள் என்ற பகுதியை இயக்கி அசத்தியிருந்தார். 

கோவிட்-19 நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள திரையுலகிற்கு நிதி திரட்டும் நோக்கில் நவரசா என்ற ஆந்தாலஜி உருவாகி வருகிறது. இதனை இயக்குனர்கள் மணிரத்னம், ஜெயேந்திரா இருவரும் தயாரிக்கின்றனர். ஜஸ்ட் டிக்கெட்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் உருவாகும் இந்தத் திரைப்படத்தில் ஏபி இண்டர்நேஷனல், ஆங்கிள் க்ரியேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் நிர்வாகத் தயாரிப்புப் பணிகளை மேற்கொள்கின்றன. இதில் சூர்யா வைத்து ஒரு பகுதியை உருவாக்கி வருகிறார் GVM. PC ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்துள்ளார். 

கிரிக்கெட்டில் ஆர்வம் நிறைந்த கெளதம் மேனன், இந்திய கிரிக்கெட் போட்டிகள் குறித்து கமெண்ட் செய்யும் விதமாக பதிவுகளை பகிர்வார். இந்நிலையில் இந்தியன் கிரிக்கெட் வீரர் ஷுப்மன் கில்லை பாராட்டி பதிவு ஒன்றை செய்துள்ளார். இறுதியாக சச்சினுக்கு பிறகு ஓர் சிறப்பான பேட்ஸ்மேனை பார்த்து விட்டேன் என்று புகழாரம் சூட்டியுள்ளார். Calm-ஆக, கிளாஸாக அவரது இன்னிங்கள் இருந்தது என்று தனது வாழ்த்துக்களை பதிவு செய்துள்ளார். 

ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் பிரிஸ்பேனில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 369 ரன்கள் குவித்தது, பின்னர் இந்தியா முதல் இன்னிங்சில 336 ரன்கள் சேர்த்தது. 33 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. முகமது சிராஜியின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 294 ரன்னில் ஆல்அவுட் ஆனது. இதனால் இந்திய அணிக்கு 328 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 

பிரிஸ்பேன் மைதானத்தில் 328 ரன்கள் மிகப்பெரிய இலக்கு என்பது மிகக்கடினம் என்ற நிலையுடன் இந்தியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. ரோகித் சர்மா, ஷுப்மான் கில் ஆகியோர் களம் இறங்கினர். இந்தியா 1.5 ஓவரில் 4 ரன்கள் எடுத்திருக்கும்போது நேற்றைய 4-வது நாள் ஆட்டம் மழையால் நிறுத்தப்பட்டது. அதன்பின் ஆட்டம் அத்துடன் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

இன்று கடைசி நாள் ஆட்டம் நடைபெற்றது. 62 ஓவர்கள் உள்ள நிலையில் இந்தியாவின் வெற்றிக்கு 245 ரன்கள் தேவையிருந்தது. உணவு இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியதும் ஷுப்மான் கில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். புஜாராவும் ஆட்டத்தில் வேகத்தை கூட்டினார். 91 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஷுப்மான் கில் நாதன் லயன் பந்தில் ஆட்டமிழந்தார். அப்போது இந்தியா 132 ரன்கள் எடுத்திருந்ததது.

அடுத்து வந்த ரஹானே தொடக்கத்தில் இருந்து அதிரடியாக விளையாட முடிவு செய்தார். ஆனால் 22 பந்தில் 24 ரன்கள் எடுத்த நிலையில் கம்மின்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார். 4-வது விக்கெட்டுக்கு புஜாரா உடன் ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்தார். இந்தியா தேனீர் இடைவேளை வரை 3 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் எடுத்துள்ளது. புஜாரா 24 ரன்களுடனும், ரிஷப் பண்ட் 10 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

அப்போது இந்தியாவின் வெற்றிக்கு குறைந்தது 37 ஓவரில் 145 ரன்கள் தேவை. கைவசம் 7 விக்கெட் இருந்தது. தேனீர் இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியது. ரிஷப் பண்ட், புஜாரா அபாரமாக விளையாடினர். அரைசதம் அடித்த புஜாரா 211 பந்தில் 56 ரன்கள் எடுத்து வெளியேறினார். மறுமுனையில் ரிஷப் பண்ட் 100 பந்தில் அரைசதம் அடித்தார்.

புஜாரா ஆட்டமிழந்த பிறகு மயங்க் அகர்வால் களம் இறங்கினார். ஒருபக்கம் அடித்தும் விளையாட வேண்டும். அதேசமயம் விக்கெட்டும் இழக்கக் கூடாது என்ற நிலை ரிஷப் பண்ட்-க்கு ஏற்பட்டது. மயங்க் அகர்வால் 9 ரன்னில் வெளியேற ரிஷப் பண்ட்-க்கு நெருக்கடி ஏற்பட்டது. கடைசி 8 ஓவரில் 50 ரன்கள் தேவைப்பட்டது. கம்மின்ஸ் பந்தில் வாஷிங்டன் சுந்தர் ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரி அடித்து நம்பிக்கை ஊட்டினார்.

இதனால் கடைசி 7 ஓவரில் 39 ரன்கள் தேவைப்பட்டது. 7-வது ஓவரில் 15 ரன்கள் கிடைத்தது. இதனால் 6 ஓவரில் 24 ரன்கள் தேவைப்பட்டது. 6-வது ஓவரில் 9 ரன்கள் கிடைத்தது. கடைசி 5 ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்டது. 5-வது ஓவரை நாதன் லயன் வீசினார். இந்த ஓவரின் 5-வது பந்தில் வாஷிங்டன் சுந்தர் தேவையில்லாமல் ரிவர்ஸ் ஸ்வீப் ஆடி ஆட்டமிழந்தார். என்றாலும் அவர் 29 பந்தில் 21 ரன்கள்  எடுத்தார். அடுத்து ஷர்துல் தாகூர் களம் இறங்கினார். இந்த ஓவரில் ஐந்து ரன்கள் கிடைத்தது. 

கடைசி 4-வது ஓவரில் 10 ரன்கள் தேவைப்பட்டது. 4-வது ஓவரை ஹசில்வுட் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தை பண்ட் பவுண்டரிக்கு விரட்டினார். 4-வது பந்தில்  ஷர்துல் தாகூர் ஆட்டமிழந்தார். கடைசி பந்தை ரிஷப் பண்ட் பவுண்டரிக்கு விரட்ட இந்தியா 3 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.