தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இந்நிலையில் ரஜினிகாந்தை வைத்து 25 படங்களை இயக்கிய எஸ்.பி. முத்துராமனுக்கு அவரின் 86வது பிறந்தநாள் அன்று உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து சென்னையில் இருக்கும் மெட்வே மருத்துவமனையில் அனுமதித்தார்கள். 

அவருக்கு கோவிட் 19 அறிகுறிகள் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது. பிறந்தநாள் அன்று முத்துராமன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறித்து அறிந்த திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் கவலை அடைந்தனர். அவருக்கு ஒன்றும் ஆகாது, விரைவில் குணமாகி வீடு திரும்புவார், நாங்கள் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறோம் என்று பலரும் சமூக வலைதளங்களில் தெரிவித்தனர். அவர்களின் பிரார்த்தனைக்கு பலன் கிடைத்துவிட்டது. 

இந்நிலையில் இயக்குனர் முத்துராமன் குணமடைந்துவிட்ட செய்தி தெரியவந்தது. இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, கோவிட் 19 மற்றும் கோவிட் நிமோனியா அறிகுறிகளுடன் கடந்த 7ம் தேதி மெட்வே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல இயக்குநர் மிஸ்டர் எஸ்.பி. முத்துராமன் முழுவதும் குணமடைந்துவிட்டார் என்பதை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

அவர் இன்று வீடு திரும்பினார். அவரின் நிலைமை நார்மலாக இருக்கிறது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனை அறிக்கையை பார்த்த நலம் விரும்பிகள் மகிழ்ச்சி அடைந்திருப்பதுடன், கடவுளுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது. இதனால் தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது.