சின்னத்திரையில் பல கோடி ரசிகர்களின் ஃபேவரட் தொகுப்பாளராக திகழும் திவ்யதர்ஷினி எனும் DD தனக்கே உரித்தான பாணியில் கலகலப்பாக பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். தொகுப்பாளராக மட்டுமல்லாமல் நடிகையாகவும் தமிழ் சினிமாவில் DD நடித்து வருகிறார்.

முன்னதாக தமிழில் மாதவன் நடித்த நளதமயந்தி மற்றும் விசில் ஆகிய படங்களில் நடித்த DD, நீண்ட இடைவெளிக்குப்பிறகு நடிகர் தனுஷ் இயக்கத்தில் வெளிவந்த பவர் பாண்டி திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதனையடுத்து கடைசியாக இயக்குனர் ராஜீவ் மேனன் இயக்கத்தில் ஜீவி பிரகாஷ் குமார் கதாநாயகனாக நடித்த சர்வம் தாளமயம் படத்திலும் DD நடித்திருந்தார்.

மேலும் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சீயான் விக்ரம் கதாநாயகனாக நடித்திருக்கும் துருவ நட்சத்திரம் மற்றும் பிக்பாஸ் வருண் நடித்துள்ள ஜோஷ்வா இமைபோல் காக்க ஆகிய திரைப்படங்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் DD நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் DD இணைந்துள்ளார்.

கலகலப்பு 2 படத்திற்கு பிறகு சுந்தர்.சி இயக்கத்தில் ஜீவா மற்றும் ஜெய் இணைந்துள்ள இத்திரைப்படத்தில் ஸ்ரீகாந்த், மாளவிகா ஷர்மா, "பிகில்" அம்ரிதா,  பிக்பாஸ் ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். கலகலப்பான ஃபேமிலி என்டர்டெயின்மென்ட் படமாக தயாராகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியது.

இந்நிலையில் ஊட்டியில் நடைபெற்று வரும் இந்த படப்பிடிப்பில் இணைந்துள்ள DD, சுந்தர்.சி, ஜீவா மற்றும் ஜெய்யுடன் இணைந்திருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு, படத்தில் நடிப்பதை அதிகாரப்பூர்வமாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். வைரலாகும் அந்த புகைப்படம் இதோ...