தனுஷ் நடிப்பில் வரும் பிப்ரவரி 17 வெளியாகவுள்ள திரைப்படம் வாத்தி. பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கிய இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் ஒரே நேரத்தில் வெளியாகவுள்ளது.சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் பார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் இணைந்து தயாரிக்கும் வாத்தி திரைப்படத்தில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். மேலும் கல்வியை மையப்படுத்தி உருவாகியிருக்கும் இப்படத்தில் ஆசிரியராக தனுஷ் நடிக்க அவருடன் இணைந்து சம்யுக்தா, சமுத்திரக்கனி, சாய் குமார், ஆடுகளம் நரேன், இளவரசு, கென் கருணாஸ், மொட்ட ராஜேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் வாத்தி திரைப்படத்தின் தெலுங்கு மொழி ‘சார்’ படத்தின் முன் வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக தெலுங்கு ரசிகர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இவ்விழாவில் தனுஷ், சம்யுக்தா, சமுத்திரகனி மற்றும் படக்குழுவினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டார். மேலும் இசையமைப்பாளர் தமன் மற்றும் இயக்குனர் திருவிக்ரம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். இதில் திரைப்படம் குறித்து பல விஷயங்களை இயக்குனர் வெங்கி பகிர்ந்து கொண்டார். இதில் தெலுங்கு ரசிகர் முன்னிலையில் தனுஷ் பேசியது, “நான் ஒரு தமிழ் நடிகன், எனக்கு தமிழ் மட்டும் தான் பேச வரும். தெலுங்கு பெருசா பேச வராது. ஆனால் எனக்கு தெரிஞ்ச தெலுங்கில் பேசுகிறேன். எதாவது பிழை இருந்தால் மன்னித்து கொள்ளுங்கள். 2002 ல் என்னுடைய முதல் படம் வெளியானது. அப்போது இருந்த அதே படப்படப்பு, பயம் இப்போது தெலுங்கில் வெளியாகும் என்னுடைய 'சார்' படத்திற்கும் உள்ளது. எந்த மொழியில் படம் நடித்தாலும் அதே உணர்வுதான் எனக்கு இருக்கின்றது. எல்லா படங்களும் எனக்கு முதல் படம் போல் தான். சார் படம் கூட எனக்கு முதல் படம் போல் தான் தோன்றுகிறது.
‘சார்’ திரைப்படம் பிரம்மாண்டமான உணர்வுகள் கொண்ட எளிமையான திரைப்படம். படத்தில் எல்லாமேஎளிமையாக தான் இருக்கும். மெனக்கெடல் இல்லாமல் சாதாரணமாக தான் நடித்திருப்பேன். சாதாரணமான கதைதான். ஆனால் மிகப்பெரிய செய்தி இதில் உள்ளது. படம் வரும் பிப்ரவரி 17 வெளியாகவுள்ளது. மகிழ்ச்சியாகவும் உள்ளது பதட்டமாகவும் உள்ளது. தயாரிப்பாளர் வம்சியும் வெங்கியும் படத்தின் மீதான அவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கை எனக்கு மேலும் பயத்தை உருவாக்குகிறது.ஒருபுறம் நம்பிக்கை இருந்தாலும் ஒருபுறம் பயமாக தான் இருக்கிறது. நான் ரொம்ப மதிப்புமிக்க படத்தில் நடித்திருக்கிறேன் என்ற நம்பிக்கை உள்ளது. இதே உணர்வு உங்களுக்கும் இருக்கும் என்று நான் நம்புகிறேன். இது உங்களுடைய கதை. உங்களுக்கான திரைப்படம். இப்படி ஒரு படத்தை கொடுத்ததற்கு நான் இயக்குனர் வெங்கி க்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்” என்றார் தனுஷ்.
அதனை தொடர்ந்து ரசிகர்கள் தனுஷை பாடல் பாட சொல்லி கேட்க தனுஷ் வாத்தி படத்தில் இடம்பெற்றுள்ள ‘வா வாத்தி’ பாடலை தெலுங்கில் பாட தொடங்கினார். ரசிகர்களின் ஆரவாரமான கைத்தட்டல்களும் விசில்களும் அரங்கம் நிறைந்து ஒலித்தது.மேலும் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.