கன்னட சினிமா துறையில் போதை பொருள் பயன்படுத்தியது குறித்த சர்ச்சை வெடித்தது. நடிகைகள் சஞ்சனா கல்ராணி, ராகினி திவேதி கைதாகி தற்போது சிறையில் இருக்கின்றனர். இச்செய்தி ஒட்டு மொத்த திரையுலகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. போதைப்பொருள் சர்ச்சை தற்போது பாலிவுட் சினிமா துறையை உலுக்கி வருகிறது. பல முக்கிய பிரபலங்களின் பெயர்களும் இதில் அடிபட்டு வருகிறது. 

நடிகர் சுஷாந்த் சிங் மரணத்தை அடுத்து பாலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சுஷாந்த்தை தற்கொலைக்கு தூண்டியதாகவும், பண மோசடியில் ஈடுபட்டதாகவும் அவரது தந்தை கே.கே. சிங், நடிகை ரியா சக்கரவர்த்தி மீது பீகார் போலீசில் புகார் அளித்தார். இதுபற்றி அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. அப்போது ரியாவின் வாட்ஸ்-அப் உரையாடல்களை ஆய்வு செய்த போது, அவருக்கும் போதைப் பொருள் கும்பலுக்கும் தொடர்பு இருந்தது தெரியவந்தது. தனது தம்பி சோவிக் மூலம் ரியா போதைப்பொருளை வாங்கி சுஷாந்த் சிங்கிற்கு கொடுத்துள்ளார்.

இதையடுத்து ரியா, அவர் சகோதரர் சோவிக், சாமுவேல் மிரண்டா உள்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்தி திரையுலகைச் சேர்ந்த சிலர் போதைப்பொருள் விவகாரத்தில் சிக்கி இருப்பது தெரிய வந்தது. போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

நடிகைகள் ரகுல் பிரீத் சிங், தீபிகா படுகோன், ஷரத்தா கபூர், சாரா அலி கான் ஆகியோருக்கும் தொடர்பு இருப்பதாக தெரியவந்தது. இதனால் அவர்களுக்கு சம்மன் அனுப்பினர். அதன்படி நேற்று முன்தினம் ரகுல் பிரீத் சிங்கிடம் சுமார் 4 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

இந் நிலையில் தீபிகா படுகோனிடம் நேற்று 5 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. கடந்த 2017 ஆம் ஆண்டு தனது மானேஜர் கரிஷ்மா பிரகாசுக்கும் தனக்கும் இடையே போதைப் பொருள் குறித்து நடந்ததாகக் கூறப்படும் வாட்ஸ்-அப் உரையாடல்களை தீபிகா ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது. ஷ்ரத்தா கபூர், சாரா அலிகான் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இந்நிலையில், விசாரணையில் கலந்துகொண்ட தீபிகா படுகோன், ஷ்ரத்தா, சாரா அலிகான், ரகுல் பிரீத் சிங் ஆகியோர் செல்போன்களை போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் விசாரணைக்காக பறிமுதல் செய்துள்ளனர். போதைப் பொருள் தொடர்பான உரையாடல் நடந்திருக்கிறதா என்பதை கண்டறிய போலீசார் இதைப் பறிமுதல் செய்ததாகக் கூறப்படுகிறது.

இந்த ஆண்டு வெளியான சபாக் திரைப்படம் தீபிகாவுக்கு சிறப்பான பெயரை பெற்று தந்தது. கபீர் கான் இயக்கத்தில் வெளியாகவிருக்கும் 83 படத்தின்  தயாரிப்பு பணிகளையும் மேற்கொண்டார் தீபிகா படுகோன். இதைத்தொடர்ந்து அடுத்ததாக தெலுங்கில் பிரபாஸ் ஜோடியாக ஒரு பிரம்மாண்ட படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். பிரபாஸ் 21 என தற்காலிகமாக அழைக்கப்பட்டு வரும் அந்த படத்தின் ஷூட்டிங் இன்னும் சில மாதங்களில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

சாரா அலிகான் கைவசம் அத்ரங்கி ரே திரைப்படம் உள்ளது. ஆனந்த் எல். ராய் இயக்கிவரும் இந்த படத்தில் தனுஷ் மற்றும் அக்ஷய்குமார் நடிக்கின்றனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். ரகுல் ப்ரீத் கைவசம் இந்தியன் 2 திரைப்படம் உள்ளது. பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கி வரும் இந்த படத்தில் உலகநாயகன் கமல் ஹாசன் நடிக்கிறார். ஷ்ரத்தா கபூர் கடைசியாக பாகி 3 படத்தில் நடித்திருந்தார். இதனையடுத்து அவர் ஆடை ஹிந்தி ரீமேக்கில் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியானது. இதன் அதிகாரப் பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.