தமிழில் மிகவும் புகழ்பெற்ற எழுத்தாளர்களில் ஒருவரான கல்கி எழுதிய சிறந்த படைப்பான பொன்னியின் செல்வன் நாவல்,  பொன்னியின் செல்வன் திரைப்படமாக தயாராகிறது. இயக்குனர் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் இணைந்து பொன்னியின் செல்வன் திரைப்படத்தை மிகப் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.

தமிழ் ரசிகர்களின் கனவு திரைப்படமாக உருவாகும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இயக்குநர் மணிரத்னம் இயக்குகிறார் ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்ய, இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைக்க, தோட்டா தரணி கலை இயக்கம் செய்துள்ளார். இதன் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது.

பொன்னியின் செல்வன் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களாக நடிகர்கள் சீயான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, பிரகாஷ்ராஜ், பார்த்திபன், ஜெயராம், சரத்குமார் மற்றும் நடிகைகள் ஐஸ்வர்யாராய், திரிஷா, ஐஸ்வர்யா லெக்ஷ்மி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அருள்மொழி வர்மன் டாப் பாத்திரத்தில் நடித்து வந்த ஜெயம் ரவி சமீபத்தில் தனது படப்பிடிப்பை நிறைவு செய்தார்.

இந்நிலையில் தற்போது நடிகர் சியான் விக்ரம் தனது படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளார். பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஆதித்த கரிகாலன் எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ள சீயான் விக்ரம் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டு பாகங்களுக்கும் தன் பகுதி காட்சிகளை நிறைவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து பொன்னியின் செல்வனில் அடுத்தடுத்து அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.