கழுகு படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை பிந்து மாதவி.  அதன் பின், கேடி பில்லா கில்லாடி ரங்கா, தேசிங்கு ராஜா, வருத்தப்படாத வாலிபர் சங்கம் ஆகிய படங்கள் இவரது திரைப்பயணத்திற்கு கைக்கொடுத்தது.  பின் பட வாய்ப்புகள் அதிகம் இல்லாத போது தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 1-ல் கலந்து கொண்டார். 

இதன் மூலம் மக்கள் மனதில் நன்கு பதிந்த பிந்து மாதவி, அந்நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின் அவருக்கு பட வாய்ப்புகள் வந்தன. இறுதியாக 2019ம் ஆண்டு கிருஷ்ணா நடிப்பில் வெளியான கழுகு இரண்டாம் பாகத்தில் நடித்திருந்தார். தற்போது ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் உருவாகி வரும் யாருக்கும் அஞ்சேல் என்ற படத்தில் நடித்துள்ளார். 

புரியாத புதிர் மற்றும் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தைத் தொடர்ந்து முழுக்க பெண்களை மையப்படுத்தி த்ரில்லர் படமான யாருக்கும் அஞ்சேல் படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பை ஒரே கட்டமாகவும் முடித்து, இறுதிக்கட்டப் பணிகளில் கவனம் செலுத்தி வருகின்றனர் படக்குழுவினர். 

படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் துவங்கி இப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்தது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் STR இணைந்து படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை வெளியிட்டனர். இத்திரைப்படத்தை தேர்ட் ஐ என்டர்டெயின்மெட் நிறுவனம் தயாரிக்கிறது. 

பிந்து மாதவி மற்றும் தர்ஷனா பானி இருவரும் பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை மாலை 7 மணிக்கு வெளியாகிறது. இதனை விஜய்சேதுபதி வெளியிடுகிறார் என்ற செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் ரஞ்சித் ஜெயக்கொடி. முழுக்க முழுக்க ஊட்டி பின்னணியில் படமாக்கப்பட்டுள்ளது. சுமார் 30 நாட்களில் முழு படப்பிடிப்பையும் முடித்துவிட்டது படக்குழு. கடந்த மாதம் படத்தின் டப்பிங் பணிகள் நிறைவடைந்தது. பிந்து மாதவி தன் சொந்த குரலில் பேசி நடித்துள்ளார் என்பது கூடுதல் சிறப்பு. 

லாக்டவுனில் பல திரைப்படங்களில் போஸ்ட் ப்ரோடக்ஷன் மற்றும் டப்பிங் பணிகள் நடைபெறுவதை பார்க்க முடிந்தது. அரசு அனுமதியுடன் குறைந்த பட்ச ஆட்கள் கொண்டு பாதுகாப்புடன் நடைபெற்றது. இந்த படத்தை தொடர்ந்து மாயன் என்ற படத்தில் நடிக்கவுள்ளார் பிந்து மாதவி.