பூஜா என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் அக்ஷய் குமார் நடித்து உருவாகும் திரைப்படம் பெல் பாட்டம். இந்த படத்தில் அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடிகை வாணி கபூர் நடிக்கிறார். மேலும் ஹுமா குரேஷி, லாரா தத்தா உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடிகர் தலைவாசல் விஜய்யும் நடிக்கிறார். ஊரடங்கில் துவங்கிய முதல் படம் என்ற பெருமையையும் இப்படம் பெற்றது. 

இயக்குநர் ரஞ்சித் திவாரி இயக்கத்தில் மறக்கப்பட்ட ஒரு ஹீரோவை பற்றிய த்ரில்லர் கதையாக இந்த படம் உருவாக உள்ளது. இதன் படப்பிடிப்பு கிளாஸ்கோவில் முறையான பாதுகாப்புடன் ஆரம்பமாகி நிறைவடைந்தது. கடந்த வாரம் இந்த படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டு அசத்தியுள்ளனர் படக்குழுவினர். அடுத்த வருடம் 2021-ம் ஆண்டு ஏப்ரல் 2-ம் தேதி வெளியாகவிருக்கும் இந்த படத்தை காண ஆவலில் உள்ளனர் திரை விரும்பிகள். 

தற்போது இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களை ஈர்த்து வருகிறது. விமான நிலையத்தில் கையில் பேக் ஒன்றை எடுத்து கொண்டு மாஸாக நடந்து வருகிறார் அக்ஷய். பெல் பாட்டம் ஸ்டைலில் பேண்ட் அணிந்துள்ளார். கடைசியாக வந்த காட்சிகளில் வண்டியில் தொங்கிய படி செல்கிறார். படத்தில் அக்ஷய் ரா ஏஜென்ட்டாக நடித்துள்ளார் என்பதால் கதையில் ஏராளமான ட்விஸ்ட் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

ஆஜ் என்ற படத்தின் மூலம் 1987-ம் ஆண்டு திரையுலகில் அறிமுகமானவர் பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார். சில வருட போராட்டத்திற்கு பிறகு 1992-ம் வெளியான கில்லாடி என்ற படத்தின் மூலம் இவருக்கு ஒரு சிறந்த அங்கீகாரம் கிடைத்து என்பது குறிப்பிடத்தக்கது. சிறந்த நடிகராக மட்டும் இல்லாமல் அதிசிறந்த ஸ்டண்ட் கலைஞராகவும் இவர் திகழ்ந்து வருகின்றார். இதுவரை வெளியான அவருடைய படங்களுக்கு டூப் இல்லாமல் இவரே சண்டைகள் காட்சிகளில் நடிப்பார் என்பது அனைவரும் அறிந்ததே. 

சிறந்த ஆக்ஷன் நடிகராக வளம்வரும் இவர் ஆரம்ப காலம் முதலே சிறந்த சமூக ஆர்வலராகவும் திகழ்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கொரோனா காலத்திலும் இவர் கோடிக்கணக்கில் அரசுக்கும் பொது மக்களுக்கும் நிதி கொடுத்துள்ளார் என்றால் அது மிகையல்ல. 2018ம் ஆண்டு சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியான 2.0 திரைப்படம் தான் இவர் தமிழில் நடித்த முதல் திரைப்படம் என்றபோது இவருக்கு தமிழிலும் ரசிகர்கள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஊரடங்கிலும் கொரோனா விழிப்புணர்வு குறித்த அரசு விளம்பரங்களில் நடித்தார். 

2011-ம் ஆண்டு தமிழில் ராகவா லாரன்ஸ் தயாரித்து, இயக்கி, நாயகனாக நடித்திருந்த படம் காஞ்சனா. தற்போது லக்‌ஷ்மி பாம் என்கிற பெயரில் அக்‌ஷய்குமார், கியாரா அத்வானி நடிக்க, லாரன்ஸ் இயக்கத்தில் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இதில் அக்ஷய் குமார் முதல் முறையாக திருநங்கையாக நடித்துள்ளார். கியாரா அத்வானி ஹீரோயினாக நடித்துள்ளார். கொரோனா நெருக்கடியால் இந்தத் திரைப்படம் நேரடியாக டிஜிட்டல் வெளியிடாக டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் நவம்பர் 9-ம் தேதி வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.