தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகைகளுள் ஒருவர் அதுல்யா ரவி. இவரது நடிப்பில் கடைசியாக நாடோடிகள் 2 திரைப்படம் வெளியானது. அடுத்ததாக நடிகர் ஷாந்தனுவுடன் முருங்கைகாய் சிப்ஸ் படத்தில் நடித்து வருகிறார். சந்தோஷ் பிரதாப், அதுல்யா ரவி, தீபக் பரமேஷ், அரவிந்த் ராஜகோபால் உட்பட பலர் நடிக்கும் என் பெயர் ஆனந்தன். கனகா வெங்கடேசன், சவீதா வெங்கடேசனின் சவீதா சினி ஆர்ட்ஸ் மற்றும் கோபி கிருஷ்ணப்பாவின் காவ்யா புரொடக்சன்ஸ் நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளன. இந்த படத்தை ஸ்ரீதர் வெங்கடேசன் இயக்கியுள்ளார். 

இவர் 6 அத்தியாயம் படத்தில் இடம்பெற்ற ஆறு அத்தியாயங்களில் ஒன்றான, சித்திரம் கொல்லுதடி படத்தை இயக்கியவர். கதை திரைக்கதை வசனம் இயக்கம், தாயம் ஆகிய படங்களில் நடித்த சந்தோஷ் பிரதாப் கதாநாயகனாக நடிக்கிறார். அதுல்யா ரவி, நாயகி. இந்தப் படம் வரும் 27-ம் தேதி, திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. சர்வதேச பட விழாக்களில் கலந்துகொண்டு நான்கு முறை சிறந்த படத்திற்கான விருதுகளை வென்றுள்ள இந்தப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில், நாயகி அதுல்யா ரவி ஆர்வம் காட்டவில்லை என்று தகவல் வெளியானது.

இதுகுறித்து தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் தரப்பில் கேட்ட போது பரபரப்பு புகார்கள் வெளிவந்தன. இந்தப்படத்தில் அதுல்யா ரவி ஒப்பந்தமான போது, ஒரு படத்தில் மட்டுமே நடித்திருந்தார். அடுத்து சுசீந்திரன், சமுத்திரக்கனி போன்ற இயக்குனர்களின் படங்களில் நடித்தார். தொடர்ந்து அவருக்கு, தான் முன்னணி நடிகையாகி விட்டோம் என்கிற உணர்வு ஏற்பட்டு விட்டது.

எங்கள் படம் ஒவ்வொரு முறை சர்வதேச விருது பெற்ற போதெல்லாம் அந்த செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட கூட மறுத்துவிட்டார். ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர், டீசர் என படத்தின் எந்த புரமோஷனிலும் அவர் பங்கேற்கவில்லை. போஸ்டர் டிசைன்காக அதுல்யா ரவியின் போட்டோ ஷூட்டை நடத்த திட்டமிடிருந்தோம். அதற்கும் தட்டி கழித்து கொண்டே இருந்தார். இப்போதும் நவ 27 ஆம் தேதி ரிலீஸ்-க்கு எந்த ஒத்துழைப்பையும் தரவில்லை. தமிழ் திரையுலகில், இன்னும் வளர்ந்து, ஒரு இடத்தை பிடிக்க வேண்டிய அதுல்யா, இப்படி மோசமான முன்னுதாரணமாக மாறிவிட்டது வேதனை அளிக்கிறது.

தமிழ் நடிகைகளுக்கு ஏன் வாய்ப்பு தர மறுக்கிறீர்கள் என பரவலாக ஒரு குற்றச்சாட்டு உண்டு. ஆனால் தமிழ்ப்பெண் என்பதாலேயே எங்கள் படத்தில் அதுல்யா ரவியை நடிக்கவைத்து விட்டு, தற்போது புரமோஷன் நிகழ்ச்சிக்கு கூட அவரை கெஞ்ச வேண்டிய நிலைக்குத்தான் எங்களை தள்ளியுள்ளார் என்று தெரிவித்துள்ளனர்.