தர்பார் படத்தை அடுத்து சிறுத்தை சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். அவருடன் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் உள்ளிட்டோர் நடித்து வருகிறார்கள். வெற்றி ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைக்கிறார்.

கொரோனா அச்சுறுத்தலால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் 14-ம் தேதி முதல் மீண்டும் தொடங்கியது. இதற்காக நடிகர் ரஜினிகாந்த், நயன்தாரா உள்ளிட்ட படக்குழுவினர் டிசம்பர் 13-ம் தேதி சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் ஹைதராபாத் புறப்பட்டுச் சென்றனர்.

முறையான பாதுகாப்புடன் கடந்த ஒருவார காலத்துக்கும் மேலாக ஹைதராபாத் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் படத்தில் பணியாற்றிய சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது என்றும் இணையத்தில் செய்திகள் கிளம்பியது. 

தற்போது இது குறித்து தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ், அண்ணாத்த படக்குழுவுக்கு வழக்கமாக நடத்தப்படும் கொரோனா பரிசோதனையில் நான்கு பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளதால், தற்போதைக்கு படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று தகவலைதெரிவித்துள்ளனர்.  

மேலும் ரஜினிகாந்துக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் அவருக்கு தொற்று பாதிப்பில்லை என தெரிய வந்துள்ளதாகவும் அவர் ஹைதராபாத்தில் தனிமைப்படுத்தப் பட்டிருப்பதாகவும் அண்ணாத்த படக்குழு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றோ அல்லது நாளையோ அவர் சென்னை திரும்பலாம் என்றும் கூறப்படுகிறது.