இந்திய சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராகவும் தெலுங்கு திரையுலக ரசிகர்களின் ஃபேவரட் ஹீரோவாகவும் விளங்கும் நடிகர் பிரபாஸ் தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் அடுத்தடுத்து பிரமாண்டமான திரைப்படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் இந்திய அளவில் பிரமாண்ட வெற்றி பெற்ற கேஜிஎஃப் படத்தின் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் தயாராகி வரும் சலார் படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார் பிரபாஸ்.

தொடர்ந்து தெலுங்கு & ஹிந்தி என இரு மொழிகளில் தீபிகா படுகோன் மற்றும் அமிதாப்பச்சனுடன் இணைந்து ப்ராஜெக்ட் கே படத்திலும் நடித்து வரும் பிரபாஸ் முன்னதாக நேரடி பாலிவுட் திரைப்படமாக ஹிந்தி மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் ஆதிபுருஷ் படத்தில் நடித்துள்ளார். இதிகாசக் கதைகளைமான இராமாயணத்தைத் தழுவி தயாராகியிருக்கும் ஆதிபுருஷ் திரைப்படத்தின் இறுதி கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இந்த வரிசையில் அடுத்ததாக பிரபாஸின் ரொமான்டிக் ஆக்சன் திரைப்படமாக தயாராகியுள்ள ராதேஷ்யாம் திரைப்படம் வருகிற மார்ச் 11ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. ராதேஷ்யாம் படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்க, பாக்யஸ்ரீ, கிருஷ்ணம் ராஜு, சத்யராஜ், ஜெகபதிபாபு, முரளி சர்மா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என 5 மொழிகளில் வெளியாகும் ராதே ஷ்யாம் படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய, ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். இசையமைப்பாளர் தமன்.S பின்னணி இசை சேர்க்கிறார். UV  கிரியேஷன்ஸ் மற்றும் T-SERIES பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள ராதே ஷ்யாம் திரைப்படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில் ராதேஷ்யாம் திரைப்படத்தில் கதை சொல்பவராக(Narrator) பாலிவுட் திரையுலகின் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் இணைந்துள்ளார் என தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.