தமிழ் சினிமாவின் குறிப்பிடப்படும் சிறந்த இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் அமீர், நடிகர் சூர்யா கதாநாயகனாக நடித்த மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர். தொடர்ந்து அமீர் இயக்கத்தில் ஜீவா நடித்து வெளிவந்த ராம் திரைப்படம் பலரது கவனத்தையும் ஈர்த்தது.

இதனையடுத்து நடிகர் கார்த்தியின் முதல் படமாக இயக்குனர் அமீர் இயக்கத்தில் வெளிவந்த பருத்திவீரன் திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வர்த்தக ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்ப்பைப் பெற்றது. கடைசியாக நடிகர் ஜெயம் ரவி இரட்டை வேடங்களில் நடித்த ஆதிபகவன் திரைப்படத்தை இயக்கிய அமீர் தமிழ் சினிமாவில் நடிகராகவும் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

குறிப்பாக இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் கதாநாயகனாக நடித்து வெளிவந்த வடசென்னை திரைப்படத்தில் ராஜன் என்னும் கதாபாத்திரத்தில் அசத்தியிருந்தார் இயக்குனர் அமீர். இதனிடையே நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இயக்குனராக தனது புதிய திரைப்படத்தை இயக்குனர் அமீர் சமீபத்தில் தொடங்கினார்.

இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் தங்கம் இணைந்து திரைக்கதை மற்றும் வசனம் எழுதும் இறைவன் மிகப் பெரியவன் படத்தை இயக்குனர் அமீர் இயக்குகிறார். இப்படத்தில் சூரி கதாநாயகனாக நடிக்கிறார்.JSM பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இத்திரைப்படத்திற்கு ராம்ஜி ஒளிப்பதிவில் யுவன் ஷங்கர் ராஜா இசை அமைக்கிறார். 

இந்நிலையில் இறைவன் மிகப் பெரியவன் படத்தின் முதல் பாடலுக்கான வேலைகளை நேற்று (பிப்ரவரி 22ஆம் தேதி) தொடங்கியுள்ளதாக யுவன் ஷங்கர் ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் இயக்குனர் அமீருடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். தொடர்ந்து இறைவன் மிகப் பெரியவன் படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.