கடந்த 2011-ம் ஆண்டு இயக்குனர் பாலா இயக்கத்தில் ஆர்யா மற்றும் விஷால் நடித்து வெளியான திரைப்படம் அவன் இவன். இந்தப் படத்தில் நடிகர்கள் ஜனனி அய்யர், அம்பிகா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்தப் படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இந்தப் படம் குறித்து ஒரு சர்ச்சை கிளம்பியது. அதாவது, இந்தத் திரைப்படத்தில் சிங்கம்பட்டி ஜமீன் குறித்தும், சொரிமுத்து அய்யனார் கோயில் குறித்தும் தவறான கருத்து இடம்பெற்றிருந்ததாகக் கூறி இயக்குநர் பாலா, நடிகர் ஆர்யா, தயாரிப்பாளர் கல்பாத்தி எஸ். அகோரம் ஆகியோர் மீது சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதி மகன் சங்கர் ஆத்மஜன் மானநஷ்ட வழக்குத் தொடர்ந்தார்.

சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இந்த வழக்கை நடத்த தடைவாங்கிய நிலையில், தடை காலம் முடிந்து அம்பாசமுத்திரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணைக்கு இயக்குநர் பாலா நேரில் ஆஜரான நிலையில் ஆர்யா இதுவரை விசாரணைக்கு நேரில் ஆஜராகவில்லை.

இந்நிலையில் புதன்கிழமையான நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது அம்பாசமுத்திரம் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் செப்டம்பர் 28ஆம் தேதி நடிகர் ஆர்யா விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார். திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பக்கத்தில் உள்ளது சிங்கம்பட்டி ஜமீன். இதில் 31-வது ராஜவாக இருந்து வந்தவர் முருகதாஸ் தீர்த்தபதி. 1936-ம் ஆண்டு தந்தை சங்கர தீர்த்தபதி மறைவுக்குப் பிறகு 6 வயதில் முருகதாஸ் தீர்த்தபதிக்கு முடிசூட்டப்பட்டது.

இந்தியாவில் ஜமீன் முறை ஒழிக்கப்பட்டதற்கு முன்பே முருகதாஸ் தீர்த்தபதி பதவி ஏற்றுவிட்டதால், இவர் தான் கடைசி ராஜாவாக இருந்தார். இந்நிலையில் கடந்த மே மாதம் 25ஆம் தேதி முருகதாஸ் தீர்த்தபதி வயது முதிர்வின் காரணமாக தனது 89-வது வயதில் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் ஆர்யாவுக்கு கடந்த ஆண்டு வெளியான காப்பான் மற்றும் மகாமுனி திரைப்படங்கள் வெளியாகியது. இந்த இரண்டு படங்களிலும் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் ஆர்யா. தற்போது ஆர்யா நடிப்பில் உருவாகி ரிலீஸுக்கு ரெடியாக இருக்கும் படம் டெடி. ஸ்டுடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்தை சக்தி சௌந்தர் ராஜன் இயக்கியுள்ளார். இமான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.  யுவா இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். 

ஆர்யாவுக்கு ஜோடியாக இந்த படத்தில் சாயிஷா நடித்துள்ளார். திருமணத்திற்கு பிறகு ஆர்யா மற்றும் சயீஷா இருவரும் ஒன்று சேர்ந்து நடிக்கும் படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கடைசியாக காப்பான் படத்தில் இருவரும் சேர்ந்து நடித்திருந்தனர். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகளும் முடிவடைந்தது.

சைக்கிளிங் தொடர்ந்து பாக்ஸிங்கில் ஆர்யா ஈடுபடுவதை அடிக்கடி காண முடிகிறது. பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகிவரும் சல்பேட்டா படத்தில் பாக்ஸராக நடிக்கிறார் ஆர்யா. வடசென்னை பகுதியில் பாக்ஸிங் விளையாட்டு சம்பந்தப்பட்ட கதை என்று கூறப்படுகிறது. இந்த படத்தில் கலையரசன், தினேஷ், துஷாரா உள்ளிட்டோர் முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளனர். சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். 

இதுதவிர்த்து சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகிவரும் அரண்மனை 3 படத்தில் நடிக்கிறார் ஆர்யா. ஹாரர் படமாக உருவாகும் இந்த படத்தில் ஆர்யா பேயாக நடிக்கிறார் என்றெல்லாம் இணையத்தில் செய்தி கிளம்பியது.