தமிழ் திரை உலகின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக திகழும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அடுத்ததாக நடிகர் RJ பாலாஜி உடன் இணைந்து புதிய திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். டார்க் காமெடி திரில்லர் படமாக தயாராகும் இப்படத்தின் அறிவிப்பு சில தினங்களுக்கு முன்பு வெளியான நிலையில் விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

முன்னதாக இயக்குனர் R.கண்ணன் இயக்கத்தில் மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான தி கிரேட் இந்தியன் கிச்சன் படத்தின் தமிழ் ரீமேக்கில் கதாநாயகியாக நடித்துள்ள ஐஸ்வர்யா ராஜேஷ், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சீயான் விக்ரம் கதாநாயகனாக நடித்திருக்கும் துருவ நட்சத்திரம் மற்றும் நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் சைக்கோ திரில்லர் படமாக உருவாகியிருக்கும் மோகன்தாஸ் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

இந்த வரிசையில் அடுத்ததாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய திரைப்படம் இன்று (மார்ச் 9) தொடங்கியது. 2020ஆம் ஆண்டு நேரடியாக Zee5 தளத்தில் வெளிவந்து பலரது கவனத்தையும் ஈர்த்த LOCK UP திரைப்படத்தின் இயக்குனர் சார்லஸ் இயக்கத்தில் உருவாகும் இந்த புதிய படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

Huebox ஸ்டுடியோஸ் மற்றும் ஹம்சினி என்டர்டெயின்மென்ட் இணைந்து வழங்கும் இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் இணைந்து லட்சுமி பிரியா சந்திரமௌலி, மைம் கோபி, ரெட்டின் கிங்ஸ்லி, சுனில் ரெட்டி, கருணாகரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, பாலா ஒளிப்பதிவு செய்கிறார். இந்நிலையில் இன்று (மார்ச் 9ஆம் தேதி) இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. இதர அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.