இந்திய சினிமாவின் குறிப்பிடப்படும் நடிகைகளில் ஒருவராகவும் முன்னணி கதாநாயகியாகவும் திகழும் நடிகை சுருதிஹாசன் கோலிவுட் பாலிவுட் டோலிவுட் என பல மொழிகளிலும் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். கடைசியாக தெலுங்கில் பின்க் படத்தின் ரீமேக்காக பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடித்த வக்கீல் சாப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஸ்ருதிஹாசன் நடித்திருந்தார்.

தமிழில் கடைசியாக மறைந்த இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்த லாபம் படத்தில் கதாநாயகியாக நடித்த ஸ்ருதிஹாசன் சமீபத்தில் அமேசன் ப்ரைம் வீடியோவில் வெளியான பெஸ்ட் செல்லர் ஹிந்தி வெப் சீரிஸிலும் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அடுத்ததாக தெலுங்கில் இயக்குனர் கோபிசந்த் மலினேனி இயக்கத்தில் நந்தமுரி பாலகிருஷ்ணா கதாநாயகனாக நடிக்கும் #NBK107 திரைப்படத்திலும், கன்னடத்தில் வெளிவந்து இந்திய அளவில் சூப்பர்ஹிட்டான கேஜிஎஃப் படத்தின் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் சலார் திரைப்படத்திலும் தற்போது ஸ்ருதிஹாசன் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை ஸ்ருதிஹாசனுக்கு தற்போது கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தனது சமூக வலைதளப் பக்கங்களில் "தேவையான பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்ற போதும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது" என்றும் "விரைவில் மீண்டு வருவேன்" என்றும் நடிகை ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார்.

நடிகை ஸ்ருதிஹாசன் விரைவில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீண்டுவர கலாட்டா குழுமம் வேண்டிக் கொள்கிறது. பொதுமக்கள் அனைவரும் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள கட்டாயம் முக கவசம் அணிந்து கொண்டு இரண்டு தவணை தடுப்பூசி எடுத்துக்கொண்டு பாதுகாப்போடு இருங்கள்.