பிரபல கன்னட நடிகரான சிரஞ்சீவி சார்ஜா நடிகை மேக்னா ராஜை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் சிரஞ்சீவி கடந்த ஜூன் மாதம் 7ம் தேதி மாரடைப்பால் மரணம் அடைந்தார். அப்பொழுது மேக்னா ராஜ் மூன்று மாதம் கர்ப்பமாக இருந்தார்.

குழந்தை வடிவில் மீண்டும் சிரஞ்சீவியே வரப் போகிறார் என்று அவரின் மாமா ஆக்ஷன் கிங் அர்ஜுன் மற்றும் ரசிகர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் மேக்னா ராஜ் இன்று ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். சிரஞ்சீவி உயிருடன் இருந்தபோது எந்த மருத்துவமனையில், எந்த அறையில் தன் குழந்தை பிறக்க வேண்டும் என்பதை மேக்னாவிடம் தெரிவித்திருந்தாராம்.

கணவரின் ஆசைப்படி அவர் சொன்ன மருத்துவமனையிலேயே குழந்தையை பெற்றெடுத்துள்ளார் மேக்னா. குழந்தை பிறந்த விஷயம் அறிந்த ரசிகர்கள் மருத்துவமனைக்கு முன்பு கூடிவிட்டார்கள். சிரஞ்சீவியே மீண்டும் பிறந்து வந்துள்ளதாகக் கூறி அவர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தார்கள்.

சிரஞ்சீவியின் குடும்பத்தார் ரசிகர்களுக்கு இனிப்பு வழங்கி தங்கள் மகிழ்ச்சியை அவர்களுடன் பகிர்ந்து கொண்டனர். குட்டி சிரு சரியாக 11.07 மணிக்கு பிறந்ததாக சிரஞ்சீவியின் நெருங்கிய நண்பர் தெரிவித்துள்ளார். அந்த குழந்தைக்காக சிரஞ்சீவியின் தம்பியும், நடிகருமான த்ருவா சார்ஜா ரூ. 10 லட்சம் மதிப்புள்ள வெள்ளித் தொட்டில் வாங்கினார். அவர் தொட்டில் அருகில் நிற்கும் புகைப்படம் வெளியாகி வைரலானது.

முன்னதாக நடந்த வளைகாப்பு நிகழ்ச்சியின்போது மேக்னா ராஜ் தன் கணவரின் ஆளுயர கட்அவுட்டை தன் அருகில் நிற்க வைத்து புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டார். குழந்தை பற்றி மேக்னா ராஜ் கூறியதாவது, குட்டிப் பாப்பா வரப் போவதை ரசிகர்களிடம் எப்படி வித்தியாசமாக சொல்வது என்று நானும், சிரஞ்சீவியும் யோசித்து வைத்திருந்தோம். ஆனால் யாருமே எதிர்பார்க்காத வகையில் அந்த செய்தியை வெளியாக வைத்துவிட்டார் கடவுள்.

உன்னை ஒரு நாளும் தனியாக விட மாட்டேன் என்பார் சிரஞ்சீவி என்றார். சிரஞ்சீவி தான் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற மகனாக வந்து பிறந்துவிட்டார் என்கிறார்கள் குடும்பத்தாரும், நண்பர்கள். நடிகை மேக்னா ராஜ் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறது நம் கலாட்டா.