புற்றுநோய் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் தவசி தற்போது காலமானார். இந்த செய்தி தெரிந்தவுடன் திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.  கிழக்குச் சீமையிலே திரைப்படத்தில் தொடங்கி, தற்போது ரஜினி நடிக்கும் அண்ணாத்த படம் வரைக்கும் ஏராளமான கிராமத்து, குணச்சித்திர, நகைச்சுவை வேடங்களில் நடித்தவர் தவசி. 

வருத்தப்படாத வாலிபர் சங்கம், கொம்பன் உள்ளிட்ட படங்களில் இவரது கதாபாத்திரம் பேசப்பட்டது. கருப்பன் குசும்புக்காரன் என்ற ஒற்றை வசனத்தின் மூலம் பிரபலமடைந்தவர். வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில், நடிகர் சூரிக்கு அப்பாவாக இவர் நடித்த கதாபாத்திரம் பலராலும் பாராட்டப்பெற்றது. குறி சொல்லும் வேடம், சாமியாடும் பாத்திரம் இவருக்கு அருமையாக பொருந்தும். 

உணவுக்குழாயில் ஏற்பட்ட புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தவசி, மதுரை சரவணா மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்தார். சிகிச்சைக்குப் பணமில்லாமல் தான் திண்டாடுவதாகவும், தனக்கு உதவுமாறும் அவர் வேண்டுகோள் விடுக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். 

புற்றுநோயால் மெலிந்த உடலுடன் அவரது வழக்கமான கம்பீரமான மீசையில்லாமல் ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறியிருந்தார். அவரது தோற்றம் காண்போர் மனதை உறையவைத்தது. தவசியின் சிகிச்சைக்கு சரவணா மருத்துவமனை சார்பில் அதன் உரிமையாளரும், திருப்பரங்குன்றம் திமுக எம்எல்ஏவுமான டாக்டர் சரவணன் தனது சூர்யா தொண்டு நிறுவனத்தின் மூலம் உதவினார். 

அதன் பின் நடிகர்கள் சிவகார்த்திகேயன், சூரி, விஜய் சேதுபதி, சிம்பு, ரோபோ ஷங்கர், சௌந்தர் ராஜா, சமுத்திரக்கனி ஆகியோர் உதவினர். சூப்பர்ஸ்டார் ரஜினியும் தொலைபேசி வாயிலாக விசாரித்தார். விஜய் சேதுபதியும் ஆறுதல் கூறினார். 

அத்தனை உதவியும் கைக் கொடுக்கவில்லை. சினிமாவைப் பொருத்தவரை உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் நடிகர் நடிகைகள் மட்டும்தான் சொகுசான வாழ்க்கையை வாழ்கின்றனர் ஆனால், துணை நடிகர்களாக இருக்கும் எத்தனையோ, மக்களுக்கு பரிட்சயமான நடிகர்களின் வாழ்க்கை எப்போதும் சோகத்தில் தான் முடிகிறது. அந்த வகையில் தமிழில் எண்ணற்ற படங்களில் நடித்த நடிகர் தவசியின் நிலைமையும் தற்போது பரிதாபத்தில் முடிந்துள்ளது. 

மறைந்த நடிகர் தவசிக்கு வயது 60. தவசியின் மறைவுக்கு திரைபிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மக்களை மகிழ்வித்த ஒரு கலைஞனின் வாழ்வு இப்படி முடிய வேண்டுமா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த 2020 வருடம் மிகவும் மோசமானது என்பதற்கு இதுவும் எடுத்துக்காட்டு என்று கமெண்ட் செய்து வருகின்றனர். இறைவனை மகிழ்விக்க சென்றுள்ள நடிகர் தவசியின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறது நம் கலாட்டா. அவர் நடித்த நகைச்சுவை காட்சிகள் என்றும் நம்மை மகிழ்விக்கும்.