கொரோனா வைரஸ் பரவல் இரண்டாவது அலை மொத்த உலகத்தையும் உலுக்கியுள்ளது. முதல் அலையை விட இரண்டாவது அலையில் இருந்த தீவிரம் பல உயிர்களை வேட்டையாடி உள்ளது. முகக் கவசம் சமூக இடைவெளியை பின்பற்றுதல் சனிடைசர்  என எத்தனையோ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்த பின்னும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதில் மிகவும் சிரமம் ஏற்பட்டது. 

தற்போது தடுப்பூசி பயன்பாட்டிற்கு வந்திருப்பது கொஞ்சம் ஆறுதல் அளித்தாலும் இன்னும் மக்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறது. மேலும் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்க தங்களது உயிரையும் பணயம் வைக்கும் மருத்துவர்கள் மீது ஆங்காங்கே நடத்தப்படும் தாக்குதல்கள் இன்னும் மனதை வேதனையடைய வைக்கிறது. 

இந்நிலையில் தென்னிந்தியாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் நானி நடித்துள்ள கொரோனா விழிப்புணர்வு பாடல் ஒன்று வெளியாகி சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. நடிகர் நானி தோன்றும் இந்த ஆல்பம் பாடலில் நடிகர் சத்யதேவ் மற்றும் நடிகை ரூபா நடித்துள்ளனர். இசையமைப்பாளர் விஜய் புல்கனின் இசை அமைத்துள்ள இந்தப் பாடலை சுமந்த் பிரபாஸ் இயக்கியுள்ளார்.

வானம் தோன்றாதோ என்ற இந்த பாடலை தமிழ் சினிமாவின் பிரபல பாடலாசிரியர் மதன் கார்க்கி எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளிவந்துள்ள இந்தப் பாடல் தற்போது சமூக வலைதளங்கள் அனைத்திலும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக பரவிவருகிறது.