ஆயிரத்தில் ஒருவன் 2 சாத்தியமா ? நடிகர் கார்த்தி அளித்த பதில் !
By Sakthi Priyan | Galatta | February 06, 2019 10:02 AM IST
திரையுலகிற்கு பல அற்புதமான படைப்புகளை தந்த இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் செல்வராகவன். காதல் கொண்டேன், புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன போன்ற படங்களின் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்திருக்கிறார்.
இவரது படங்கள் வெறும் படங்களாக இல்லாமல், பாடமாகவும் இருந்து வருகிறது. தனது தரமான ஸ்கிரிப்ட்டுகள் மூலம் தமிழ் சினிமாவின் ஜீனியஸ் என்று அழைக்கப்படுகிறார். திரைக்கும் ரசிகர்களுக்கும் உள்ள தூரத்தை குறைப்பதில் இவருக்கு நிகர் இவரே.
இவர் இயக்கத்தில் கடந்த 2010-ம் ஆண்டு வெளியான படம் ஆயிரத்தில் ஒருவன். தமிழ் சினிமா வரலாற்றை திரும்பி பார்க்க வைத்த படம் என்றும் புகழலாம். கார்த்தி, ரீமா சென், ஆண்ட்ரியா, பார்த்திபன், அழகம்பெருமாள், பிரதாப் போத்தன் போன்ற நடிகர்களின் சீரான நடிப்பில் அனைவரையும் ஈர்த்தது. படம் வெளியான தருணத்தில் இதன் அருமையும், மகிமையும் புரியாதோர் பின்பு உணர துவங்கினர்.
சமீபத்தில் நடந்த தேவ் படத்தின் பிரஸ் மீட்டில், ஆயிரத்தில் ஒருவன் நடக்குமா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த கார்த்தி, சரியான தயாரிப்பாளர்கள் அமைய வேண்டும். படத்தின் இரண்டாம் பாகம் எப்போது என்றெல்லாம் என்னிடம் கேட்டு வருகிறார்கள் என்று கூறினார். சரியான நேரம் அமைந்தால் நிச்சயம் அமைய வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
உண்மையிலேயே சினிமா விரும்பிகள் அனைவருக்கும் இந்த ஆர்வம் உள்ளது. ஆயிரத்தில் ஒருவன் படத்தின் மூலம் நம்மை சோழ தேசம் அழைத்து சென்றவர் இயக்குனர் செல்வராகவன், விரைவில் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை துவங்குவார் என எதிர்பார்க்கலாம்.