மலையாளத் திரையுலகில் நடிகராக அறிமுகமாகி மக்களின் மனதைக் கவர்ந்த நடிகர் ஜெயராம் மலையாளம் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் பல்வேறு திரைப்படங்களில் கதாநாயகன், குணசித்திர நடிகர், துணை நடிகர், வில்லன் என பல விதமான கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

குறிப்பாக இயக்குனர் மணிரத்னத்தின் இயக்கத்தில் இந்திய திரை உலகின் பிரம்மாண்ட படைப்பாக தயாராகி இந்த ஆண்டு ரிலீஸாகவுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஆழ்வார்க்கடியான் நம்பி எனும் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் ஜெயராம், பிரபாஸின் ராதேஷ்யாம் திரைப் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மேலும், இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் கதாநாயகனாக நடித்து வரும் RC15 மற்றும் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு கதாநாயகனாக நடித்து வரும் சர்க்காரு வாரி பாட்டா உள்ளிட்ட படங்களிலும் நடிகர் ஜெயராம் நடித்து வருகிறார். இதனிடையே தற்போது நடிகர் ஜெயராம் அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நடிகர் ஜெயராம் விரைவில் வைரஸ் தொற்றில் இருந்து மீண்டுவர கலாட்டா குழுமம் சார்பாக வேண்டிக்கொள்கிறோம்.

இதுகுறித்து நடிகர் ஜெயராம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “அனைவருக்கும் வணக்கம்! எனக்கு கோவிட் 19 தொற்று இன்று உறுதி செய்யப்பட்டது. இது இந்த வைரஸ் இன்னும் நம்மை சுற்றி இருக்கிறது என்பதை நினைவூட்டியிருக்கிறது. என்னோடு தொடர்பில் இருந்தவர்கள் தயவு செய்து உங்களை தனிமைப் படுத்திக் கொண்டு பரிசோதனை செய்து கொள்ளுங்கள். மருத்துவர்களின் அறிவுரைப்படி எனது சிகிச்சைகளை தொடங்கிவிட்டேன் வெகு விரைவில் மீண்டு வருவேன்” என நினைக்கிறேன் என தெரிவித்துள்ளார். 

கொரோனா வைரஸ் பரவலின் 3-வது அலையிலிருந்து நம்மை நாம் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள முக கவசம், சானிடைசர் உள்ளிட்டவற்றை சரியாக பயன்படுத்துங்கள். கட்டாயமாக தடுப்பூசி எடுத்துக் கொள்ளுங்கள்.