தமிழ் சினிமாவின் பிரபல இளம் இயக்குநர்களில் ஒருவராக விளங்கும் இயக்குனர் கார்த்திக் நரேன் துருவங்கள் பதினாறு திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். சஸ்பென்ஸ் க்ரைம் த்ரில்லர் படமாக வெளிவந்த துருவங்கள் பதினாறு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதனையடுத்து கார்த்திக் நரேன் இயக்கத்தில் அரவிந்த்சாமி முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க உருவான நரகாசூரன் திரைப்படத்தின் ரிலீஸில் தாமதம் ஏற்பட்டுள்ளது. முன்னதாக அருண் விஜய் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் வெளிவந்த மாஃபியா திரைப்படம் கடந்த 2020ம் ஆண்டு ரிலீஸ் ஆனது.

கடைசியாக இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்த மாறன் திரைப்படம் சில தினங்களுக்கு முன்பு நேரடியாக டிஸ்னி ப்லஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் ரிலீசான நிலையில் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் அடுத்த திரைப்படமாக தயாராகி வருகிறது நிறங்கள் மூன்று. நடிகர்கள் அதர்வா , சரத்குமார் மற்றும் ரஹ்மான் ஆகியோர் நிறங்கள் மூன்று படத்தில் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

ஐங்கரன் இண்டர்நேஷனல் தயாரிப்பில் உருவாகும் நிறங்கள் 3 படத்திற்கு டிஜோ டாமி ஒளிப்பதிவில் ஸ்ரீஜித் சாரம் படத்தொகுப்பு செய்ய, ஜேக்ஸ் பிஜாய் இசை அமைத்துள்ளார். நிறங்கள் மூன்று படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் துருவங்கள் பதினாறு படத்திற்கு பிறகு மீண்டும் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் நிறங்கள் மூன்று படத்தில் நடித்து வரும் நடிகர் ரஹ்மான் நிறங்கள் மூன்று படத்தின் படப்பிடிப்பில் தன் பகுதி படப்பிடிப்பை நிறைவு செய்து உள்ளதாக அதிகாரப்பூர்வமாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். தொடர்ந்து இதர அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.