பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் வெளிவந்த பாய்ஸ் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகராக அறிமுகமானவர் பரத். தொடர்ந்து விஷாலின் செல்லமே திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த பரத் இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளிவந்து மெகா ஹிட்டான காதல் திரைப்படத்திற்கு பிறகு தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகுந்த பிரபலமடைந்தார்.

தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வரும் நடிகர் பரத் கதாநாயகனாக நடித்து கடைசியாக வெளிவந்த காளிதாஸ்,நடுவன் திரைப்படங்கள் த்ரில்லர் படமாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் பல படங்களில் வில்லனாகவும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வரும் பரத் கடைசியாக துல்கர் சல்மான் நடிப்பில் வெளிவந்த குருப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து வரும் பரத்தின் 50-வது திரைப்படத்தின் அறிவிப்பு தற்போது வெளியானது. RP பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் படத்தின் 50-வது படத்தை பிரபல எழுத்தாளர் RP.பாலா இயக்குகிறார். மலையாளத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான லூசிஃபர், மறைகாயர் குருப் ஆகிய படங்களின் வசனம் மற்றும் பாடல்களை தமிழில் எழுதிய எழுத்தாளர் RP.பாலா இப்படத்தில் முதல்முறை இயக்குனராக களமிறங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கதாநாயகியாக நடிகை வாணி போஜன் நடிக்க, ராதாரவி, விவேக் பிரசன்னா, டேனியல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர் PG.முத்தையா ஒளிப்பதிவில் ரோனி ரஃபேல் இசையமைக்கிறார். இந்நிலையில் பரத்தின் 50-வது திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று (மார்ச் 16) பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.முன்னணி தயாரிப்பாளர் கலைப்புலி.S.தாணு அவர்கள் படப்பிடிப்பை தொடங்கி வைத்துள்ளார். இதர அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.