திருமணமான 4 மாதத்தில் கணவனை கொலை செய்து மனைவி, அந்த உடலை கிணற்றுக்குள் வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் தான் இப்படி ஒரு பரபரப்பு சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூர் ஊராட்சிக்கு உட்பட்ட போரம் கிராமத்தைச் சேர்ந்த 29 வயதான பாண்டித்துரை என்ற இளைஞருக்கும், அந்த பகுதியைச் சேர்ந்த 23 வயதான நந்தினி என்ற இளம் பெண்ணுக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இரு வீட்டார் முறைப்படி திருமணம் நடைபெற்று உள்ளது.

திருமணம் நடந்த நாள் முதல் கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால், தம்பதியினர் இருவரும் நிம்மதியில்லாமல் தவித்து வந்திருக்கின்றனர்.

இந்த சூழலில் தான், கடந்த மாதம் 20 ஆம் தேதி முதல் கணவன் பாண்டித்துரையை காணவில்லை என்று கூறி, அவரது குடும்பத்தினர் அங்கு பல்வேறு இடங்களில் தேடி உள்ளனர். 

ஆனால், எங்குத் தேடியும் அவர் கிடைக்காத நிலையில், பாண்டித்துரையின் தாயார் மீனாட்சி, அங்குள்ள ஆதனக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், மாயமான பாண்டித்துறையை தீவிரமாகத் தேடி வந்தனர்.

இதனையடுத்து, சந்தேகத்தின் பேரில் பாண்டித்துரையின் மனைவி நந்தினியிடமும் போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில் தான் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அதாவது, “கடந்த மாதம் 20 ஆம் தேதி வீட்டில் கணவன் - மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பெரும் சண்டையே நடந்து உள்ளது. 

அப்போது, கடும் ஆத்திரமடைந்த கணவன் பாண்டித்துரை, அவரது மனைவியின் கழுத்தை நெரிந்து உள்ளார். இதனால், கணவன் மீது கடும் ஆத்திரமடைந்த அவரது மனைவி, வீட்டின் இருந்த கத்தியை எடுத்து கணவன் பாண்டித்துரையின் தலையில் அடித்திருக்கிறார். அதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்து உள்ளார். 

இதனால், பதறிப்போன அவரது மனைவி, உயிரிழந்த கணவனின் சடலத்தை வீட்டின் அருகே உள்ள கிணற்றில் வீசிவிட்டு ஒன்றும் தெரியாதது போல், வீட்டிற்கு வந்துள்ளார்” என்பது தெரிய வந்திருக்கிறது.

இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த பாண்டித்துரையின் குடும்பத்தினர் மற்றும் போலீசார், கிணற்றில் அழுகிய நிலையில் கிடந்த பாண்டித்துரையின் சடலத்தை மீட், பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

இந்த பாண்டித்துரை மாயமான வழக்கை கொலை வழக்காக மாற்றி போலீசார், அவரது மனைவி நந்தினியை கைது செய்து, அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதனிடையே, திருமணமான 4 மாதத்தில் கணவனை, மனைவியே கொலை செய்து உடலைக் கிணற்றுக்குள் வீசிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.