9 வாகனங்கள் அடுத்தடுத்து மோதல்!
By Aruvi | Galatta | 03:13 PM
அதிக மேக மூட்டம் காரணமாக 9 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது.
தமிழகத்தில் போகிப் பண்டிகை கலைகட்டி உள்ள நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் பழைய பொருட்களை எரித்தனர். இதனால், சென்னை உள்பட பல பகுதிகளில் பனி மூட்டத்தைத் தாண்டி, புகை மூட்டமாகக் காணப்பட்டன.
இந்நிலையில், ராணிப்பேட்டை பகுதியிலும் அதிகாலை நேரத்தில் அதிக அளவிலான புகை மூட்டம் காணப்பட்டன.
அந்த நேரத்தில் சாலையில் செல்லும் வாகனங்கள் பின்னால் வருபவர்களுக்குத் தெரியாமல் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.
இதனிடையே, ராணிப்பேட்டை - வாலாஜாபேட்டை மேம்பாலத்தில் பனிமூட்டம் காரணமாக 6 கார்கள், 3 ஈச்சர் லாரிகள் என மொத்தம் 9 வாகனங்கள், அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், 10 பேர் படுகாயமடைந்து, அருகில் உள்ள வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு, அவர்களுக்குத் தீவிரமாகச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், விபத்து காரணமாக, சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், 2 மணி நேரத்திற்கும் மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.