கள்ளக் காதலால் கணவனை கொன்றுவிட்டு நாடகமாடிய மனைவியை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளனர். 

தேனி மாவட்டம் வீரபாண்டி அடுத்து உள்ள தர்மாபுரி கிராமத்தைச் சேர்ந்த 29 வயதான கலையரசி என்ற பெண்ணிற்கும், அங்குள்ள கடமலைக்குண்டு அருகில் இருக்கும் மேலப்பட்டியை சேர்ந்த முத்துக்காளை என்பவருக்கும் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு இரு வீட்டார் பெற்றோர் முன்னிலையில் முறைப்படி திருமணம் நடைபெற்றது. 

திருமணத்திற்குப் பிறகு இந்த தம்பதியரின் வாழ்க்கை மிகவும் சந்தோசமாக சென்றுகொண்டிருந்தது. இதனால், இந்த தம்பதிக்கு 13 வயதில் ஹரீஷ்குமார் என்ற மகனும், 12 வயதில் கிஷோர் குமார் என்ற இரு மகன்கள் இருக்கிறார்கள். 

அதே நேரத்தில், கேரளாவில் தங்கி சமையல் வேலை பார்த்து வந்த கணவன் முத்துக்காளை, ஒவ்வொரு 3 மாதத்திற்கு ஒரு முறை சொந்த ஊருக்கு வந்து செல்வது வழக்கம்.

அந்த நேரத்தில் வீட்டில் பிள்ளைகளுடன் இருந்த கலையரசி, அந்த பகுதியில் நடைபெறும் கட்டட வேலைக்கு சென்று வந்துள்ளார். அப்போது, அங்கு பணியாற்றி வந்த சேதுபதி உடன் கலையரசிக்கு அறிமுகம் ஏற்பட்டு, நல்ல பழக்கமாக மாறி உள்ளது. இந்த பழக்கம், நாளடைவில் கள்ளக் காதலாக மாறியுள்ளது. இதனால், அவர்கள் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

ஆனால், இந்த கள்ளக் காதல் விசயம், சேதுபதியின் மனைவி மற்றும் அவரது உறவினர்கள் மூலம் கணவன் முத்துக்காளைக்கு தெரிய வந்தது. இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அவர், தனது மனைவி கலையரசியை கண்டித்து மேலப்பட்டியில் இருந்து தர்மாபுரிக்கு குடிபெயர்ந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் தான், தனது கள்ளக் காதல் உறவிற்கு இடையூறாக இருந்த கணவன் முத்துக்காளை கொலை செய்ய, சேதுபதியுடன் சேர்ந்து கலையரசி முடிவு செய்துள்ளார். அதன்படியே அவர்கள் இருவரும் சேர்ந்து திட்டம் போட்டுள்ளனர். 
 
அதன் படியே, கடந்த நவம்பர் 2 ஆம் தேதி முத்துக்காளையுடன் இரு சக்கர வாகனத்தில் வந்த கலையரசி, காமாட்சிபுரம் பகுதியில் வாகனத்தை விட்டு இறங்கி உள்ளார். அப்போது, அந்த பகுதியில் மறைந்திருந்த சேதுபதி மற்றும் அவரது கூட்டாளியான கணேசன் ஆகியோருடன் சேர்ந்து, முத்துக்காளையை இரும்புக் கம்பியால் தாக்கி, கொடூரமான முறையில் கொலை செய்து விட்டு, அவரது உடலை அந்த பகுதியில் இருந்த ஒரு கிணற்றில் தூக்கி வீசி விட்டு சென்று விட்டனர். 

அதன் பிறகு, அவரது குடும்பத்தினர் யாருக்கும் சந்தேகம் வராத வகையில், கணவர் முத்துக்காளையின் சகோதரர் ஈஸ்வரனுடன் சேர்ந்து தனது கணவரை காணவில்லை என்று, அங்குள்ள வீரபாண்டி காவல் நிலையத்தில் கலையரசி புகார் அளித்தார். இது குறித்து, வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் தான், கள்ளக் காதல் உறவுக்குத் தடையாக இருந்த கணவனை, காதலன் சேர்ந்து கொலை செய்தது தெரிய வந்தது.

இதனால், அதிர்ச்சியடைந்த போலீசார் கள்ளக் காதலன் சேதுபதி, கணேசன், கொலை செய்ய திட்டம் போட்ட கலையரசி ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். அதன் பிறகு, தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவின் உத்தரவுப்படி சேதுபதி, கணேசன், சதித்திட்டம் தீட்டி கணவரை கொலை செய்து நாடகமாடிய கலையரசி ஆகியோர் மீது குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அவர்கள் மதுரை மத்திய சிறையில் தற்போது அடைக்கப்பட்டனர். இந்த சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.